செய்திகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மூத்த தலைவர் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மூத்த தலைவர் கே.வரதராஜன் திடீரென காலமானார். அவரது மறைவிற்கு தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை:
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், தற்போது மத்தியக் குழுவின் சிறப்பு அழைப்பாளராகப் பொறுப்பு வகித்து வந்தவருமான கே.வரதராஜன் கரூரில் திடீரென்று காலமானார் என்ற துயரச்செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பேரியக்கத்தில் சேர்ந்து 50 ஆண்டுகள் ஆன நிலையில் மறைந்திருக்கும் அவர், பழகுவதற்கு மிகவும் எளிமையானவர். விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல்கொடுத்து வந்தவர். தற்போதும் கூட, அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் துணைத்தலைவராக இருந்தவர்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.