செய்திகள்
ஆர்.கே.பேட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது
ஆர்.கே.பேட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிப்பட்டு:
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த ஆர்.கே.பேட்டை அருகே ஞானகொல்லிதோப்பு என்ற இடத்தில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக ஆர்.கே.பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, நேற்று மாலை இன்ஸ்பெக்டர் சுரேந்திர குமார் தலைமையில் போலீசார் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பணம் வைத்து சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார், பணம் வைத்து சூதாடிக்கொண்டு இருந்த அரக்கோணத்தை சேர்ந்த யுவராஜ் (வயது 26), பாஸ்கர் (49), முனுசாமி(38), ஆறுமுகம் (45), வீரானத்தூரை சேர்ந்த பிரவீன்குமார்(27), பழனிவேல் (27), சதீஷ்குமார் (40) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.65 ஆயிரம், 5 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.