செய்திகள்
கூண்டில் சிக்கிய சிறுத்தையை படத்தில் காணலாம்.

கூண்டில் சிக்கிய சிறுத்தை காட்டில் விடப்பட்டது

Published On 2020-05-14 14:06 GMT   |   Update On 2020-05-14 14:06 GMT
விக்கிரமசிங்கபுரம் அருகே கூண்டில் சிக்கிய சிறுத்தை, காட்டில் விடப்பட்டது.
விக்கிரமசிங்கபுரம்:

நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பை வட்டத்திற்கு உட்பட்ட பாபநாசம் வனச்சரகம் ஆலடியூர் வனக்காவல் பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களான கோரையார் குளம், வேம்பையாபுரம் மற்றும் செட்டிமேடு ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக சிறுத்தைகள் அட்டகாசம் செய்து வந்தன. அவைகள் வீட்டில் முன்பு கட்டப்பட்டிருக்கும் நாய், ஆடு போன்றவைகளை கடித்து தூக்கி செல்வது வாடிக்கையாக நடந்து வந்தது.

எனவே தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் சிறுத்தைகளை பிடிக்க அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். வனத்துறையினர் 4 முறை கூண்டு வைத்து 4 சிறுத்தைகளை பிடித்து வனப்பகுதியில் கொண்டு பத்திரமாக விட்டனர். அதன் பிறகு மீண்டும் ஊருக்குள் புகுந்து சிறுத்தை அட்டகாசம் செய்து வந்தது.

தொடர்ந்து 5-வது முறையாக சிறுத்தையை பிடிக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள கோரையார்குளம் பகுதியில் வனத்துறையினர் கூண்டு வைத்தனர். தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் தனி குழு ஒன்று அமைத்து சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த கூண்டில் சிறுத்தை ஒன்று சிக்கியது. உடனே வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டு அந்த சிறுத்தையை பிடித்துச் சென்றனர். நேற்று முண்டந்துறை வனச்சரகத்திற்கு உட்பட்ட கொடமாடி வனப்பகுதியான காட்டுப்பகுதியில் கொண்டு சென்று பத்திரமாக விட்டனர். தற்போது பிடிபட்டது 2 வயதுடைய பெண் சிறுத்தை என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News