செய்திகள்
கொலை

கொட்டாம்பட்டி அருகே வாலிபர் அடித்து கொலை

Published On 2020-05-05 13:18 GMT   |   Update On 2020-05-05 13:18 GMT
கொட்டாம்பட்டி அருகே கழிவுநீர் செல்வதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
கொட்டாம்பட்டி:

கொட்டாம்பட்டி அருகே உள்ள மங்களாம்பட்டியைச் சேர்ந்தவர் பாக்கியம். இவரது மகன் பாண்டி (வயது 25). பொள்ளாச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.

ஊரடங்கு காரணமாக ஓட்டல் அடைக்கப்பட்டதால் அவர் அங்கிருந்து சொந்த ஊரான மங்களாம்பட்டிக்கு வந்திருந்தார். இந்த நிலையில் வீட்டின் கழிவுநீர் செல்வதில் பாண்டிக்கும், அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் கூலித் தொழிலாளி ராஜா (23) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றியதில் இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். உடனே அக்கம் பக்கத்தினர் தலையிட்டு அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து வீட்டில் பாண்டி அசைவின்றி கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் பஞ்சு 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் வந்து பார்த்தபோது பாண்டி ஏற்கனவே இறந்துபோனது தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்த மேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சுபாஷ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து உயிரிழந்த பாண்டியின் தாயார் பஞ்சு கொட்டாம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகனை ராஜா அடித்து கொலை செய்து விட்டதாக தெரிவித்திருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.
Tags:    

Similar News