செய்திகள்
மரணம்

மத்தூர் அருகே மின்வேலியில் சிக்கி டிப்ளமோ மாணவர் பலி

Published On 2020-04-27 07:11 GMT   |   Update On 2020-04-27 07:11 GMT
மத்தூர் அருகே மின்வேலியில் சிக்கி டிப்ளமோ மாணவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே கே. எட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாதையன். இவரது மகன் சதாசிவம். டிப்ளமோ படித்து வந்த இவர் நேற்று இரவு தனது நண்பர்களுடன் எலி வேட்டைக்கு சென்றார்.

அப்போது அந்தேரிப்பட்டியில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்வேலியில் கால் சிக்கி சதாசிவம் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே சதாசிவம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து மத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மின்வேலியில் சிக்கி இறந்து கிடந்த சதாசிவத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விவசாய நிலத்தில் மின்வேலி அமைத்த கே.எட்டிப்பட்டியை சேர்ந்த லட்சுமணன் (52), சபரி (27) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News