காரிமங்கலம் அருகே இளம்பெண் மர்ம மரணம்
காரிமங்கலம்:
தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தை அடுத்துள்ள கெங்கு செட்டிப்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல். இவர் பெங்களூருவில் கார்பெண்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சவுந்தர்யா (வயது24). இவர்களுக்கு 4 வயதில் ரிஷிதா என்ற மகளும், 1½ வயதில் ரிஷிவாசன் என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் சக்திவேல் தனது குடும்பத்துடன் பெங்களூருவில் தங்கி வேலை பார்த்து வந்தார். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து சக்திவேல் தனது குடும்பத்தை சொந்த ஊருக்கு அழைத்து வந்து விட்டார்.
இதையடுத்து நேற்று கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு நடந்ததாக தெரிகிறது. நேற்றிரவு வீட்டில் மர்மமான முறையில் சவுந்தர்யா இறந்து கிடந்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டில் இறந்து கிடந்த சவுந்தர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து சவுந்தர்யாவின் சாவின் மர்மம் குறித்து குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.