search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண் மரணம்"

    • திருமணமான 2-வது நாளில் புதுப்பெண் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • சுதாவுக்கு கடந்த 5 ஆண்டுகளாக மூச்சு திணறல் இருந்து வந்ததும், இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள வெள்ளாண்டி வலசு பகுதியை சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மகன் செந்தில் (32), இவர் கொங்கணாபுரம் அருகே உள்ள தங்காயூரில் உள்ள ஒரு பேக்கரியில் வேலைப்பார்த்து வருகிறார்.

    இவருக்கும் எடப்பாடி அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரது மகள் சுதா (27), என்பவருக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் நேற்று மதியம் சுதாவுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவரது தாய் சின்ன பொண்ணு என்பவர் சுதாவை எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அப்போது வழியிலேயே சுதா மயங்கினார்.

    இதையடுத்து அவரது தாயார் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் சுதாவை ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அப்போது சுதா இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது சுதாவுக்கு கடந்த 5 ஆண்டுகளாக மூச்சு திணறல் இருந்து வந்ததும், இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது.

    திருமணமான 2-வது நாளில் புதுப்பெண் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சிவராமக்கனி பிளஸ்-2 முடித்துவிட்டு மேலத்திருச்செந்தூர் ஊராட்சியில் ஊரக வேலைத்திட்டத்தில் வேலை செய்து வருகிறார்.
    • இரவில் சாப்பிட்ட உணவு செரிமானமாகததால் குளிர்பானம் குடித்த 21 வயது இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள நடுநாலு மூலைக்கிணறு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சவுந்திரராஜன். இவரது மகள் சிவராமக்கனி.

    இவர் பிளஸ்-2 முடித்துவிட்டு மேலத்திருச்செந்தூர் ஊராட்சியில் ஊரக வேலைத்திட்டத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சிவராமக்கனி நேற்று இரவு கடையில் முட்டை போண்டா வாங்கி சாப்பிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து இரவு வீட்டில் மீன் குழம்பு வைத்து உணவை சாப்பிட்டுள்ளார். இதனால் அவருக்கு உணவு செரிமானம் ஆகாமல் இருந்துள்ளது.

    இதனால் செரிமானம் ஆக அவர் குளிர்பானம் வாங்கி குடித்து விட்டு தூங்க சென்றுள்ளார். தொடர்ந்து நள்ளிரவு 12 மணி அளவில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனால் உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக திருச்செந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

    இரவில் சாப்பிட்ட உணவு செரிமானமாகததால் குளிர்பானம் குடித்த 21 வயது இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • திவ்யா அலிப்பிரியிலிருந்து திருமலைக்கு நடைபாதை வழியாக நடந்து சென்றார்.
    • திவ்யாவின் பெற்றோர்கள் பின்னால் நடந்து வந்தனர். திவ்யா மட்டும் படிக்கட்டுகளில் வேகமாக ஏறி சென்றார்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், அனந்தபூர் மாவட்டம், கோரண்டாவை சேர்ந்தவர் திவ்யா (வயது 18). இவர் இன்டர்மீடியட் முடித்து உள்ளார்.

    நேற்று ஏழுமலையானை தரிசிக்க தனது குடும்பத்தினருடன் திருப்பதிக்கு வந்தனர். திவ்யா அலிப்பிரியிலிருந்து திருமலைக்கு நடைபாதை வழியாக நடந்து சென்றார்.

    திவ்யாவின் பெற்றோர்கள் பின்னால் நடந்து வந்தனர். திவ்யா மட்டும் படிக்கட்டுகளில் வேகமாக ஏறி சென்றார். காளி கோபுரம் அருகே வந்தபோது திவ்யா தனது பையில் இருந்த குளிர்பானத்தை எடுத்து குடித்தார்.

    அப்போது திவ்யா மயங்கி விழுந்தார். இதனை கண்ட அவரது பெற்றோர் அலறியடித்துக் கொண்டு வந்து திவ்யாவுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.

    இருப்பினும் திவ்யா சில நிமிடங்களிலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து திவ்யாவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பதி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் பக்தர்கள் இடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

    • வீட்டில் உள்ள படுக்கை அறையில் ரேவதி இறந்து கிடந்தார்.
    • கே.கே. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை கே.கே நகர் அடுத்த விஜயராகவபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி ரேவதி (வயது30). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் வீட்டில் உள்ள படுக்கை அறையில் ரேவதி இறந்து கிடந்தார். அவர் ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது.

    இதுகுறித்து கே.கே. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாட்டறம்பள்ளி அருகே தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் சென்னை-பெங்களூர் 6 வழி சாலையில் உடலை வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • சுவேதாவின் சாவிற்கு காரணம் மாமனார், மாமியார் மற்றும் அவருடைய கணவர் தான் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த கத்தாரி கிராமம் மணியகார் வட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி சுவேதா (வயது 22) இவர்களுக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணமானது. ஜெயஸ்ரீ (வயது 2) பெண் குழந்தை உள்ளது. கணவன் மனைவிக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுவேதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திம்மாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். சுவேதாவின் உறவினர்கள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி கத்தாரி கிராமத்திலிருந்து சாலை வசதி இல்லாத காரணத்தால் சுவேதாவின் உடலை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை தோளில் தூக்கி வந்தனர்.

    நாட்டறம்பள்ளி அருகே தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் சென்னை-பெங்களூர் 6 வழி சாலையில் உடலை வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சுவேதாவின் சாவிற்கு காரணம் மாமனார், மாமியார் மற்றும் அவருடைய கணவர் தான் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி டி.எஸ்.பி.சுரேஷ் பாண்டியன், நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதின் அடிப்படையில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். திம்மம்பேட்டை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி 4 வருடங்கள் ஆவதால் திருப்பத்தூர் ஆர்.டி.ஓ. விசாரணை செய்து வருகிறார்.

    நாட்டறம்பள்ளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் 30 நிமிடம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • சசிகலாவிற்கு தனது குழந்தைகளின் நினைவு வந்தது. அவர்களின் எதிர்காலம் பற்றி நினைத்து கவலை அடைந்து வந்தார்.
    • சம்பவத்தன்று அவர் தனது கள்ளக்காதலனிடம் குழந்தைகள் பற்றி கூறி மனவேதனை அடைந்தார்.

    கோவை:

    வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி சசிகலா (வயது 25). இவர் அங்கு காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவர்களுக்கு 9 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் சசிகலாவிற்கு, அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினரான ஸ்ரீராகுல் (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் சசிகலா வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் கள்ளக்காதலனுடன் கோவை மாவட்டம் வால்பாறைக்கு வந்தனர். அங்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கி 2 பேரும் கணவன்-மனைவி போல வாழ்ந்து வந்தனர்.

    இந்த நிலையில் சசிகலாவிற்கு தனது குழந்தைகளின் நினைவு வந்தது. அவர்களின் எதிர்காலம் பற்றி நினைத்து கவலை அடைந்து வந்தார். சம்பவத்தன்று அவர் தனது கள்ளக்காதலனிடம் குழந்தைகள் பற்றி கூறி மனவேதனை அடைந்தார்.

    இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த 2 பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். சம்பவத்தன்று 2 பேரும் வால்பாறையில் உள்ள பூங்காவிற்கு சென்றனர். பின்னர் அங்கு வைத்து 2 பேரும் விஷத்தை குடித்து மயங்கி விழுந்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கு வந்தவர்கள் அவர்களை மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சசிகலா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். கள்ளக்காதலனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து வால்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×