செய்திகள்
ஆவின் பால்

முழு ஊரடங்கு- ஆவின் பால் காலை 6 மணிக்குள் சப்ளை

Published On 2020-04-25 09:35 GMT   |   Update On 2020-04-25 09:35 GMT
நாளை முதல் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் காலை 6 மணிக்குள் பால் சப்ளையை செய்து முடிக்க திட்டமிட்டுள்ளதாக ஆவின் உயர் அதிகாரி கூறினார்.
சென்னை:

கொரோனா நோய் தொற்று சென்னையில் தீவிரமாகி வருவதையடுத்து நாளை முதல் 4 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் தவிர வேற எந்த கடைகளும் திறந்திருக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மளிகை கடைகள், சிறு கடைகள் அனைத்தும் மூடப்படவுள்ளதால் ஆவின் பால் கடைகள் மூலமாக பால் விநியோகிக்கப்படுகிறது.

இந்த நாட்களில் அதிகாலை 2 மணிக்கு பால் விநியோகம் தொடங்கி 6 மணிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரம், அம்பத்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய 3 பால் பண்ணைகளிலிருந்தும், பொதுமக்களுக்கு தட்டுபாடு இல்லாமல் பால் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆவின் உயர் அதிகாரி ஒருவர் கூறி இருப்பதாவது:-

நாளை முதல் 4 நாட்கள் பால் விநியோகத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 6 மணிக்குள் பால் சப்ளையை செய்து முடிக்க திட்டமிட்டுள்ளோம். பால் முகவர்கள், பால் அட்டைகள், பால் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு எளிதாக கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு சமயத்தில் ஆவின் பால் தேவை இன்று திடீரென அதிகரித்துள்ளது. சென்னையில் 13.5 லட்சம் லிட்டர் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று 15 லட்சமாக உயர்ந்துள்ளது.

பால் பார்லர்கள் செயல்படுமா என்பது பின்னர் தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News