செய்திகள்
வாழை தோட்டம்

பழத்தார்கள் விற்பனை பாதிப்பு- வாழை தோட்டத்தை தீ வைத்து எரித்த விவசாயி

Published On 2020-04-21 07:09 GMT   |   Update On 2020-04-21 07:09 GMT
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பழத்தார்கள் விற்பனை மந்தமானதையடுத்து, ஆள் கூலி கொடுத்து பழத்தார்களை எடுத்தால் நஷ்டம் ஏற்படும் என தனது 2 ஏக்கர் வாழை தோட்டத்தை தீ வைத்து விவசாயி எரித்துள்ளார்.
பல்லடம்:

பல்லடம் சித்தம்பலம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 30) விவசாயி. இவரது தோட்டத்தில் 2 ஏக்கரில் சுமார் 2 ஆயிரம் குந்தால், நேந்திரன் ரக வாழை மரங்கள் வளர்த்து வந்தார். அந்த வாழைகளில் பழத்தார்கள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருந்தது. அறுவடை செய்த பழத்தார்களை கேரளாவிற்கு அனுப்புவது வழக்கம், ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பழத்தார்களை கேரளாவுக்கு அனுப்புவதில் தடை ஏற்பட்டது.

இதனால் ரூ.600-க்கு விற்பனையாகும் பழத்தார்களை உள்ளூர் வியாபாரிகளிடம் ரூ.150-க்கு விற்பனை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 9-ந்தேதி வீசிய பலத்த மழைக்காற்றால் சுமார் 900 வாழை மரங்கள் சரிந்து விட்டது. வாழை மரங்கள் அனைத்தும் சேதமானது, இதனால் உள்ளூர் வியாபாரிகளிடம் விற்பனை மேலும் மந்தமானது. இதனையடுத்து ஆள் கூலி கொடுத்து பழத்தார்களை எடுத்தால் நஷ்டம் ஏற்படும் என நினைத்த கோவிந்தராஜ் வேறு வழியில்லாமல் காற்றுக்கு முறிந்த வாழை மரங்களை தீ வைத்து எரித்தார். இதே போல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

Similar News