செய்திகள்
பாதுகாப்பு கவசங்கள் அணிந்த போலீசார்.

கம்பத்தில் சொந்த செலவில் பாதுகாப்பு கவசங்கள் வாங்கிய போலீசார்

Published On 2020-04-04 11:49 GMT   |   Update On 2020-04-04 11:49 GMT
கொரோனா பாதிப்பு எதிரொலியாக கம்பத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசார், தங்களது சொந்த செலவில் பாதுகாப்பு கவசங்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
கம்பம்:

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் தேனி மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு பகலாக பணியாற்றும் போலீசாருக்கு முக கவசம், கைகளை சுத்தம் செய்வதற்கு சானிடைசர், கையுறை, பாதுகாப்பு கவசம் உள்ளிட்டவை இதுவரை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் போலீசார் தங்களை கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ள சொந்த பணத்தில் பாதுகாப்பு கவசங்களை வாங்கி அணிந்து வருவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீஸ்காரர்கள் கூறியதாவது:-

கொரோனோ தடுப்பு பணியில் சுகாதாரத்துறையினர் போன்று பொதுமக்களிடம் நேரடி தொடர்பில் உள்ளோம். ஊரடங்கு விதிகளை மீறுபவர்கள் மற்றும் குற்றவாளிகளை தொட்டு பிடிக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் வெளிநாடு, வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர் களை கண்டறிந்து அவர்களை பிடித்து சுகாதார துறையினரிடம் ஒப்படைத்து வருகின்றோம். இந்த சூழ்நிலையில் போலீசாருக்கு இதுவரை பாதுகாப்பு கவசங்கள் வழங்கவில்லை. கடந்த வாரம் வரை தேனி மாவட்டத்தில் கொரோனோ பாதிப்பு இல்லாததால் பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல் பணியாற்றி வந்தோம். ஆனால் தற்போது தேனி மாவட்டத்தில் 20 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் நாங்கள், எங்களை பாதுகாத்துக்கொள்ள சொந்த பணத்தில் பாதுகாப்பு கவசங்களை வாங்கி பயன்படுத்தி வருகிறோம். எனவே அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு அனைத்து போலீசாருக்கும் பாதுகாப்பு கவசங்கள் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 
Tags:    

Similar News