செய்திகள்
ஆனந்தன்

திருமழிசையில் ரவுடி வெட்டிக்கொலை- மர்ம கும்பல் தாக்குதல்

Published On 2020-03-24 10:53 GMT   |   Update On 2020-03-24 10:53 GMT
திருமழிசையில் வீட்டு முன்பு தூங்கிய ரவுடியை மர்ம கும்பல் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர்:

திருமழிசை, உடையார் கோவில்  தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் ஆனந்தன் (38) ரவுடி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

ஆனந்தன் ஜெயிலில் இருந்தபோது  உடனயாக குடும்பத்தினர் ஜாமீனில் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் அவர் குடும்பத்தினரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த ஆனந்தன் இது தொடர்பாக மீண்டும் தாய் மற்றும் அண்ணனிடம் வாக்குவாதம் செய்தார். பின்னர் ஆனந்தன் வீட்டின் முன்பு உள்ள மரத்தில் துணியால் ஊஞ்சல் கட்டி தூங்கினார்.

இரவு 8 மணியளவில் மர்ம கும்பல் அங்கு வந்தது. அவர்கள் ஆனந்தனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினார். அதிர்ச்சி அடைந்த அவர் கொலையாளிகளிடம் இருந்து தப்பிக்க ஓடினார். ஆனாலும் விரட்டிச் சென்ற கும்பல் ஆனந்தனை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்று விட்டனர். சிறிது நேரம் கழித்து நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு ஆனந்தனின் குடும்பத்தினர் அங்கு வந்தனர். அப்போது மர்ம கும்பலால் ஆனந்தன் கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரிந்தது. இதுகுறித்து வெள்ளவேடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

கொலையுண்ட ஆனந்தன் மீது 3 கொலை வழக்குகள் உள்ளன. எனவே இந்த முன் விரோதத்தில் அவர் தீர்த்து கட்டப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக தீவிர விசாரணை நடக்கிறது. வீட்டு முன்பு தூங்கிய ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News