செய்திகள்
தேனி அருகே போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
தேனி அருகே சம்மன் வழங்கச்சென்ற போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
தேனி:
தேனி அருகே உள்ள பள்ளபட்டியை சேர்ந்த செல்வராஜ் மகன் மயில்ராஜ்(32). இவர் பணமோசடி செய்ததாக வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் மீதான விசாரணைக்கு மயில்ராஜை போலீஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு தெரிவித்து வீரபாண்டி சப்-இன்ஸ்பெக்டர் மலரம்மாள் சம்மன் பிறப்பித்துள்ளார்.
இந்த சம்மனை வழங்குவதற்காக வீரபாண்டி போலீஸ் 2-ம் நிலை காவலர் அருண்குமார் பள்ளபட்டியில் உள்ள மயில்ராஜ் வீட்டிற்கு சென்றார்.
அப்போது அருண்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி அவரது சட்டையை பிடித்து இழுத்து கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் அரசுப்பணி செய்யவிடாமல் தடுத்தார். இதுகுறித்து அருண்குமார் பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மயில்ராஜை கைது செய்தனர்.