கயத்தாறு அருகே வேன் கவிழ்ந்து டிரைவர் பலி
கயத்தாறு:
தர்மபுரி மாவட்டம் பார்ப்பார்பட்டி அண்ணா காலனியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் தினேஷ்குமார் (வயது 22). இவர் அங்கு மளிகை கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக தினேஷ்குமார், அவரது நண்பரான திருப்பூர் பல்லடத்தை சேர்ந்த டிரைவர் திருநீலகண்டன் (என்ற) முகேஷ் (24), திசையன்விளையை சேர்ந்த அந்தோணிராஜ் மனைவி அண்தோணியம்மாள் (66), மகன் அந்தோணி ரவீந்தர், இவரது மகள் ஜோஸ் மசோதா ஆகியோர் ஒரு வேனில் நேற்று இரவு புறப்பட்டனர்.
வேனை முகேஷ் ஓட்டி வந்தார். கார் இன்று காலை கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரி நான்குவழிச்சாலையில் உள்ள திருப்பத்தில் வந்த போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் கவிழ்ந்து. இதில் பலத்த காயமடைந்த டிரைவர் முகேஷ் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்த கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த 4 பேரையும் மீட்டு நெல்லை அரசு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பலியான முகேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.