செய்திகள்
கைது

தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டு- 2 வாலிபர்கள் கைது

Published On 2020-03-14 10:27 GMT   |   Update On 2020-03-14 10:27 GMT
கோவையில் தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.
கவுண்டம்பாளையம்:

கோவை பெரிய நாயக்கன் பாளையம் அடுத்துள்ள திருமலை நாயக்கன்பாளையம் ராமர் கோவில் வீதியை சேர்ந்தவர் இஸ்ரவேல் (29). இவர் கடந்த 4-ந் தேதி தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். பின்னர் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை.

இதேபோல ராக்கிபாளையம் பாலாஜி நகரில் நிறுத்தியிருந்த விக்னேஷ் (23) என்பவரின் மோட்டார் சைக்கிளிலும் திருட்டு போனது. இதுகுறித்து அவர்கள் 2 பேரும் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் மோட்டார் சைக்கிள் திருடர்களை பிடிப்பதற்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வ விநாயகம், இளவேந்தன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு திருடர்களை தேடி வந்தனர்.

சம்பவத்தன்று தனிப்படை போலீசார் மத்தம்பாளையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் சந்தேகப்படும்படியாக வந்தனர்.

போலீசாரை பார்த்ததும் அவர்கள் 2 பேரும் தப்பி ஓட முயன்றனர். இதை பார்த்த போலீசார் விரட்டி சென்று அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் மேட்டுப்பாளையத்தில் பழக்கடை நடத்தி வரும் முகமது அன்சாரி (20) என்பதும், மகாதேவபுரம் ராமசாமிபிள்ளை வீதியை சேர்ந்த பைக் மெக்கானிக் முகமது தவூபிக் (19) என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் பெரியநாயக்கன் பாளையம் பகுதிகளில் தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டதும், கோபி மற்றும் நம்பியூர் பகுதிகளில் ரூ.4 லட்சம் மதிப்பிலான டெம்போ வேன்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News