செய்திகள்
பூமியான்பேட்டையில் தாய்-மகளை தாக்கி கொலை மிரட்டல்: 2 பேருக்கு வலைவீச்சு
பூமியான்பேட்டையில் தாய்-மகளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவன்- மனைவியை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை பூமியான்பேட்டை புதுத்தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி துர்காதேவி (வயது36). நேற்று முன்தினம் இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த முருகையனின் குடும்பத்தினர் தங்கள் வீட்டில் பூஜை செய்த எலுமிச்சை பழத்தை துர்காதேவி வீட்டு முன்பு வீசினார்கள்.
இதனை துர்காதேவி கேட்டபோது ஆத்திரம் அடைந்த முருகையன், அவரது மனைவி எலிசபெத் ஆகியோர் துர்காதேவியை தகாத வாரத்தைகளால் திட்டினர். இதனை துர்காதேவியின் மகள் ஹரிணி தட்டி கேட்டார். அப்போது முருகையனும், அவரது மனைவி எலிசபெத்தும் சேர்ந்து துர்காதேவியையும் அவரது மகள் ஹரிணியையும் தாக்கி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து துர்காதேவி ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து முருகையன் மற்றும் அவரது மனைவி எலிசபெத் ஆகிய 2 பேரையும் தேடி வருகிறார்கள்.