செய்திகள்
டிக்- டாக்கை தவிர்த்து நல்ல விஷயங்களில் பெண்கள் பங்கேற்க வேண்டும்- பிரேமலதா பேச்சு
குடும்ப வாழ்க்கையை சிதைக்கும் டிக்- டாக்கை தவிர்த்து நல்ல விஷயங்களில் பெண்கள் பங்கேற்க வேண்டும் என்று தேமுதிகவின் மகளிர் தின விழாவில் பிரேமலதா பேசியுள்ளார்.
மதுரை:
திருப்பரங்குன்றத்தில் தே.மு.தி.க. சார்பில் உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மகளிர் தினவிழா இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கட்சியின் பொருளாளர் பிரேமலதா பேசியதாவது:-
சேலை போன்ற இலவசங்களுக்கு அடிபணியாமல் பெண்கள் மாறினால் தமிழகத்தில் மாற்றம் வந்துவிடும். சிஏஏவினால் ஏதாவது ஒரு குடும்பத்திற்கு பாதிப்பு என்றால் முதல் ஆளாக விஜயகாந்த் நிற்பார். எல்லாத்துறைகளிலும் சாதனை படைக்கும் பெண்கள் அரசியலிலும் சாதனை படைக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையை சிதைக்கும் டிக்- டாக்கை தவிர்த்து நல்ல விஷயங்களில் பெண்கள் பங்கேற்க வேண்டும். விஜயகாந்தை முதல்வராக்க வேண்டிய வாய்ப்பை தவறவிட்டது தமிழக மக்கள்தான். கொரோனாவுக்கு இருக்கும் அறிவு கூட சில கட்சிகளுக்கு இல்லை.
சாதி, மதம், இனம் பார்க்காமல் கொரோனா சமமாக பரவுகிறது. தங்களின் சுயலாபத்திற்காக சாதி ,மத, இனம் என பிரித்து அரசியல் ஆதாயம் தேட நினைக்கின்றனர். குழி பறிக்க பார்ப்பவர்களை புரிந்துகொள்ள குள்ளநரியின் புத்தி வேண்டும்.
கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் பேசும்போது, தமிழகத்தில் மக்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் நான் சும்மா இருக்க மாட்டேன் என்று கூறினார்.