செய்திகள்
இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற முக ஸ்டாலின்

பேராசிரியர் அன்பழகனின் இறுதி ஊர்வலம் - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

Published On 2020-03-07 11:46 GMT   |   Update On 2020-03-07 11:46 GMT
மறைந்த தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
சென்னை:

தி.மு.க. பொதுச்செயலாளராகவும், தமிழக அரசியலில் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் விளங்கியவர் பேராசிரியர் அன்பழகன்(98). உடல்நிலை பாதிப்பு முதுமையின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த சில வருடங்களாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள வீட்டில் ஓய்வில் இருந்தார்.

அவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளித்து வந்தனர். கடந்த மாதம் 24-ந் தேதி அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள்  சிகிச்சை அளித்து வந்தனர்.

வயது முதிர்வு காரணமாக அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பலன் அளிக்கவில்லை. நினைவிழந்த நிலையில் இருந்த அவர் இன்று அதிகாலை 1 மணி அளவில் ஆஸ்பத்திரியில் மரணம் அடைந்தார்.

இதைத்தொடர்ந்து, அதிகாலை 3 மணி  அளவில் அன்பழகனின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. 
  
திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் உடலுக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார்,  தந்தி டிவி இயக்குனர் ஆதவன் ஆதித்தன், நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, புதுவை முதல் மந்திரி நாராயணசாமி, வசந்தகுமார் எம்.பி., ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், கீழ்ப்பாக்கம் இல்லத்தில் இருந்து தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகனின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. இறுதி ஊர்வலத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், கனிமொழி எம்.பி. டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, ஆ.ராசா, பொன்முடி, உதயநிதி ஸ்டாலின் உள்பட ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News