செய்திகள்
விபத்து

திருக்காட்டுப்பள்ளி அருகே கார் மரத்தில் மோதி 6 பேர் படுகாயம்

Published On 2020-03-03 09:19 GMT   |   Update On 2020-03-03 09:19 GMT
திருக்காட்டுப்பள்ளி அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூதலூர்:

அரியலூர் மாவட்டம் இடையாத்தான்குடி என்ற ஊரைச் சேர்ந்த சாந்தகுமார் (32) மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து காரில் கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி சென்றுள்ளனர். வெள்ளியங்கிரியில் சாமி கும்பிட்டு விட்டு ஊருக்கு திருச்சி, கல்லணை வழியாக காரில் வந்துள்ளனர். காரை அரியலூர் மாவட்டம் தேவனூரைச் சேர்ந்த வினோத் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

கார் நேற்று அதிகாலை திருக்காட்டப்பள்ளி அருகே உள்ள கூத்தூர் மயானம் அருகே வந்தபோது குறுக்கே மாடு ஒன்று வந்துள்ளது. மாட்டில் மோதாமல் இருக்க காரை திருப்பியபோது எதிர்பாராமல் சாலையோரம் இருந்த மரத்தில் கார் மோதியது.

இதில் காரில் பயணம் செய்த சாந்தகுமார் (32), தர்மராஜ் (22), பாஸ்கர் (35), சதீஷ்(32), காரை ஓட்டி வந்த வினோத்(28), அன்பரசன்(20) ஆகிய 6 பேரும் பலத்த காயமடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவிக்கு பின்னர்தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த 6 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

Tags:    

Similar News