செய்திகள்
விளாச்சேரியில் கணவருடன் சென்ற பெண் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலி
விளாச்சேரியில் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் லாரி மோதியதில் பலியானார்.
மதுரை:
மதுரை விளாச்சேரியை சேர்ந்தவர் நவாசுதீன். இவரது மனைவி பிரதா பேகம் (வயது 50). இவர்கள் நேற்று மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
பசுமலை செக்போஸ்ட் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது அந்த வழியே டேங்கர் லாரி வந்தது. அந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் நவாசுதீன், பிரதா பேகம் தூக்கி வீசப்பட்டனர். அக்கம், பக்கத்தினர் விரைந்து வந்து 2 பேரையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்ப முயன்றனர்.
ஆனால் அதற்குள் பிரதா பேகம் பரிதாபமாக இறந்தார். நவாசுதீன் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து குறித்து மதுரை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.