செங்குன்றம் அருகே ரசாயன குடோனில் தீ விபத்து
செங்குன்றம்:
செங்குன்றத்தை அடுத்த வடபெரும்பாக்கம் வரலட்சுமி நகர், மாதவரம்- அருமந்தை சாலை அருகே மாதவரத்தை சேர்ந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான ரசாயன குடோன் உள்ளது.
சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் சுற்றிலும் மதில் சுவர் போடப்பட்டு இந்த குடோன் அமைந்து உள்ளது.
இங்கு பெயிண்ட் பேரல்கள், தின்னர் மற்றும் ரசாயன கேன்கள் ஆகியவை இறக்கி வைக்கப்பட்டு அங்கிருந்து வெளியூர்களுக்கு அனுப்பப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் குடோனில் திடீரென தீப்பற்றியது. தகவல் அறிந்ததும் செங்குன்றம், மாதவரம், மணலி, அம்பத்தூர், செம்பியம் உள்ளிட்ட பகுதி களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.
பேரல்கள் வெடித்து சிதறியதால் ஒரு கிலோ மீட்டர் உயரத்திற்கு தீப்பிளம்பு பரவியது. அருகில் குடியிருப்பு பகுதிகள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தீயணைப்பு போலீசார் விடிய, விடிய போராடி தீயை அணைத்தனர். எனினும் அங்கிருந்த ரசாயன பொருட்கள் எரிந்து நாசமானது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து செங்குன்றம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.