ஆவடியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுவன் பலி
ஆவடி:
ஆவடி, காந்திநகர் அன்பழகன் தெருவில் வசித்து வருபவர் காந்தி. ஆட்டோ டிரைவர்.
இவருக்கு யசோதா என்ற மகளும், சுமுகன் (5), சுவேகன் என்ற 2 மகன்களும் இருந்தனர். மகன்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்த வந்தனர்.
நேற்று மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சுமுகன் திடீரென மாயமானான். அவனை பெற்றோர் தேடி வந்தனர்.
இது குறித்து ஆவடி போலீசில் புகார் செய்யப்பட்டது. உதவி கமிஷனர் சத்யமூர்த்தி, இன்ஸ்பெக்டர் காளிராஜ் ஆகியோர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் வீட்டின் பின்புற உள்ள சுமார் 8 அடி ஆழம் கொண்ட திறந்த நிலையில் இருந்த கழிவுநீர் தொட்டிக்குள் சிறுவன் சுமுகன் இறந்த நிலையில் கிடப்பது தெரிந்தது. இதனை பார்த்த பெற்றோர் கதறி அழுதனர்.
உடனடியாக கழிவுநீரை அகற்றும் வாகனம் வர வழைக்கப்பட்டது. கழிவுநீர் தொட்டியில் இருந்த தண்ணீரை முழுவதும் அகற்றிய பின்னர் சுமுகன் உடல் மீட்கப்பட்டது. அவனது உடலை பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.