செய்திகள்
சிஏஏ சட்டத்துக்கு எதிராக கையெழுத்திட்டோர் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது - மு.க.ஸ்டாலின்
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தி.மு.க. நடத்திய கையெழுத்து இயக்கத்தில் இதுவரை கையெழுத்திட்டோர் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர்:
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தி.மு.க. கையெழுத்து இயக்கத்தை தொடங்கி உள்ளது.
இந்நிலையில், திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களிடம் நேற்று கையெழுத்து வாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:
நாட்டில் இருக்கும் அனைவரும் சமம் என்ற நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் சமமாக யாரும் வாழக்கூடாது என்ற உள்நோக்கத்துடன் மோடி ஆட்சிக்கு வந்தது முதல் அந்தப் பணியைச் செய்து கொண்டிருக்கிறார்.
ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம் இந்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை கடுமையாக விமர்சிக்கிறது. நம்முடைய நாட்டைப் பற்றி இன்னொரு நாடு விமர்சிக்கக்கூடிய கேவலமான நிலைக்கு, இந்த நாடு போய்க் கொண்டிருக்கிறது. அதனால்தான் நீதிகேட்டு ஒரு நெடும் பயணத்தை நாம் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். பல போராட்டங்களை வியூகம் அமைத்து நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆர்ப்பாட்டம், மனிதச்சங்கிலி, உண்ணாவிரதம், கண்டனக் கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம். தொடர்ந்து பல தீர்மானங்களை இயற்றிக் கொண்டிருக்கிறோம்.
ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெறவேண்டும் என்று முடிவு செய்து இந்த பணியைத் தொடங்கினோம். நேற்றைய கணக்கின்படி கையெழுத்து 2 கோடியைத் தாண்டிவிட்டது. மக்கள் உண்மைகளை புரிந்துகொண்டு இந்த கொடுமைகளை தெரிந்துகொண்டு அவர்களாகவே முன்வந்து கையெழுத்துகளை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த கையெழுத்து இயக்கத்தைக் கூட கேலி, கிண்டல் செய்து இதை தடைசெய்ய வேண்டும் என சிலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த கையெழுத்து இயக்கம் என்பது ஜனநாயக நடைமுறைகளில் ஒன்றுதான் என்பதை பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.