செய்திகள்
தேர்தல் பணிகள்- அதிமுக தலைமை அலுவலகத்தில் 4 நாட்கள் நிர்வாகிகள் ஆலோசனை
சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் 10-ம் தேதி முதல் 4 நாட்கள் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை:
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்தும்; தேர்தல் பணிகள் குறித்தும், சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகத்தில் வருகின்ற 10.2.2020 - திங்கட்கிழமை முதல் 13.2.2020 - வியாழக்கிழமை வரை தினமும் காலை 10 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரையிலும்; மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணிவரையிலும் மாவட்ட வாரியாக நடைபெறும்.
மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் தாங்கள் சார்ந்துள்ள மாவட்டத்திற்கான தேதி மற்றும் குறித்த நேரத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.
மாவட்ட வாரியாக ஆலோசனை நடைபெறும் நாள் மற்றும் நேரத்தையும் வெளியிட்டுள்ளனர்.