திருப்பூரில் வாலிபர் கொலையில் மேலும் 2 பேர் கைது
திருப்பூர்:
திருப்பூர் பட்டுக்கோட்டையார் நகரை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 23). இவர் கடந்த 17-ந் தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
இந்தநிலையில் கடந்த 19-ந் தேதி காலை வெள்ளியங்காடு ஈஸ்வரமூர்த்தி நகர் பூளைத் தோட்டம் காட்டுப்பகுதியில் அருண்குமார் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
நண்பர்களுக்குள் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அருண்குமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக அருண்குமாரின் நண்பர்களான வெள்ளியங்காட்டை சேர்ந்த பிரேம்குமார், ஜான் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அதே பகுதியை சேர்ந்த கஜேந்திரன், முனியப்பன் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த கொலை வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் கொலையில் தொடர்புடைய அருண்குமாரின் நண்பர்களான வெள்ளியங்காட்டை சேர்ந்த மதன்குமார் (19), கோபால்நகரை சேர்ந்த கரண்குமார் (18) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.