செய்திகள்
விபத்து பலி

வெள்ளகோவில் அருகே மொபட் மீது வேன் மோதி 2 தொழிலாளர்கள் பலி

Published On 2020-01-28 09:33 GMT   |   Update On 2020-01-28 09:33 GMT
வெள்ளகோவில் அருகே மொபட் மீது வேன் மோதி 2 தொழிலாளர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெள்ளகோவில்:

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள பாப்பம்பாளையத்தை சேர்ந்தவர் சிங்காரவேலன்(வயது 33). அதே ஊரை சேர்ந்தவர் சேமலை (50). இருவரும் கூலி தொழிலாளர்கள்.

இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் இருவரும் மொபட்டில் உப்புபாளையத்தில் இருந்து பாப்பம்பாளையத்திற்கு புறப்பட்டனர். மொபட்டை சிங்காரவேலன் ஓட்டினார்.

மொபட் வெள்ளகோவில் அருகே காடையூரான்வலசு என்ற இடத்தில் வந்த போது எதிரே வந்த வேன் மொபட் மீது மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். சம்பவ இடத்திலேயே சிங்காரவேலன் ரத்தவெள்ளத்தில் பலியானார்.

படுகாயத்துடன் உயிருக்கு போராடிய சேமலையை அக்கம், பக்கத்தினர் மீட்டு காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவரும் உயிரிழந்தார்.விபத்து ஏற்படுத்திய வேன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

பலியான சிங்காரவேலனுக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். சேமலைக்கு மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) எஸ்.ரவிக்குமார், சப்- இன்ஸ்பெக்டர் விஜயசேகரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய வேன் டிரைவரை வலை வீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News