செய்திகள்
திருப்பத்தூர் அருகே கிணற்றில் பிணமாக மிதந்த பெண் அடையாளம் தெரிந்தது
திருப்பத்தூர் அருகே கிணற்றில் பிணமாக மிதந்த பெண் அடையாளம் தெரிந்தது. அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே உள்ள பேராம்பட்டு கிராமத்திலுள்ள ஏரிக்கரை அருகே உள்ள விவசாய கிணற்றில் நேற்று முன்தினம் பெண் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுபற்றி திருப்பத்தூர் தாலுக்கா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் யார் என்ற விவரம் தெரியவில்லை. அந்த பகுதியில் பெண் யாராவது காணாமல் போய் இருக்கிறார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் பிணமாக கிடந்த பெண் பேராம்பட்டை சேர்ந்த காளியம்மாள் (வயது90) என்பது தெரியவந்தது.
இவர் கடந்த 14-ந்தேதி காணாமல் போனார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.