ஆரணி அருகே கண்களை துணியால் கட்டி 36 கி.மீ. சைக்கிள் ஓட்டிய மாணவி
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த முனுகபட்டை சேர்ந்தவர் குமார், நெசவு தொழிலாளி. இவரது மனைவி அனிதா. இவர்களது மகள் ஸ்ருதி (வயது 13). முனுகபட்டு அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.
மாணவி ஸ்ருதி கண்களை கட்டிக்கொண்டு ஓவியம் வரைதல், சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட சாதனைகளை செய்து வருகிறார்.
அதன்படி குடியரசு தினத்தை முன்னிட்டு கண்களை கட்டிக்கொண்டு மாணவி ஸ்ருதி 36 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்தார். முனுகபட்டு கிராமத்தில் உள்ள அரசு பள்ளியிலிருந்து ஆரணி- வந்தவாசி சாலையில் வந்தவாசி வரை கண்களை மூடிக்கொண்டு சைக்கிளில் சென்று திரும்பவும் முனுகபட்டுக்கு சைக்கிளில் வந்தார்.
மொத்தம் 36 கிலோ மீட்டர் தூரம் கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டி உலக சாதனை நிகழ்த்த முயற்சி செய்தார்.
மாணவியின் பாதுகாப்பு வசதிக்காக ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றும் மற்றும் தன்னார்வலர்கள் பைக்கில் மாணவியுடன் பயணம் செய்தனர்.
இதனை திருவண்ணாமலை கலாம் உலக பதிவு பவுண்டேசன் என்ற நிறுவனம் பதிவு செய்தது.
முன்னதாக மாணவி ஸ்ருதி கடந்த 23-ந் தேதி கலெக்டர் கந்தசாமி முன்னிலையில் 1 கி.மீ. தூரம் கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டி உலக சாதனை புரிய உதவுமாறு மனு அளித்திருந்தார்.
ஏற்கனவே கண்ணை கட்டி கொண்டு 33கி.மீ. தூரம் சைக்கிள் ஓட்டியது சாதனையாக இருந்தது. இதனை தற்போது ஸ்ருதி முறியடித்துள்ளார்.
இந்த சாதனையை நிகழ்த்திய ஸ்ருதியை கிராமமக்கள் வாழ்த்தினர்.