சப்-இன்ஸ்பெக்டர் மகள் திருமண விழாவில் 40 பவுன் நகை-ரூ. 1 லட்சம் கொள்ளை
பூந்தமல்லி:
சென்னை அண்ணா நகர் அருகே உள்ள பாடி புது நகரை சேர்ந்தவர் தங்கச்சாமி (57) கிண்டியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மகள் பிரதிபா பிரியதர்சினிக்கும், அய்யப் பந்தாங்கலை சேர்ந்த ஜெயகுமார் என்பவருக்கும் இன்று திருமணம் நடைபெற உள்ளது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று இரவு பூந்தமல்லி, குமணன்சாவடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடை பெற்றது.
உறவினர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். வரவேற்பு நிகழ்ச்சிக்கு பின்னர் இரவு மணப்பெண் அறைக்கு சென்று பார்த்த போது மணப்பெண் அறையில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
அங்கு வைத்திருந்த தங்க நகைகள் மற்றும் 1 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்று இருப்பது தெரியவந்தது. இதனால் மண்டபத்தில் இருந்த பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மணப்பெண் அறையில் சோதனை செய்தபோது கீழ் டிராவில் சுமார் 40 சவரன் நகை இருப்பது தெரியவந்தது. மற்றொரு டிராவில் இருந்த 40 பவுன் தங்க நகைகளை கொள்ளையர்கள் எடுத்துச் சென்றது தெரியவந்தது.
திருமண மண்டபத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தபோது அதில் 2 பேர் மணப்பெண் அறையில் உள்ள நகையை கொள்ளை அடித்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமண மண்டபத்தில் நடந்த போலீஸ் அதிகாரி மகள் திருமணத்தில் துணிகரமாக நகையை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.