செய்திகள்
அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை- அமைச்சர் விஜயபாஸ்கர்

Published On 2020-01-24 03:45 GMT   |   Update On 2020-01-24 03:45 GMT
‘தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை’ என்று அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னை:

சென்னை ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி வளாகத்தில் புதிய 550 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைக்கான நுழைவாயில், யோகா மற்றும் இயற்கை மருத்துவ மையத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் புதிதாக 550 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை விரைவில் செயல்பட உள்ளது. மருத்துவமனைக்கென தனி நுழைவு வாயில் ரூ.30 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.80 லட்சம் செலவில் யோகா, இயற்கை மருத்துவ மையம் தொடங்கப்பட்டுள்ளது.

அண்ணா நகரில் செயல்பட்டு வரும் யோகா மற்றும் இயற்கை மைய மருத்துவமனையின் கிளை மருத்துவமனையாக இந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவ மையம் செயல்படும். நகரின் முக்கிய பகுதியில் மருத்துவமனை இருப்பதால் மக்கள் எளிதில் இங்கு வந்து செல்ல முடியும்.



சீனாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை இந்தியாவில் இல்லை. சீனாவிலிருந்து வரும் பயணிகளை விமான போக்குவரத்து துறை மருத்துவர்கள், தமிழக மருத்துவ குழுவினர் மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே தமிழகத்துக்குள் அனுமதிக்கின்றனர்.

எபோலா, ஜிகா வைரஸ் போன்று இந்த வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. என மக்களுக்கு இதுகுறித்து பயமோ, பதட்டமோ தேவை இல்லை.

குழந்தை கடத்தலை தடுக்க, ஏற்கனவே பிறந்த குழந்தையின் கையில் ஆர்.எஸ்.ஐ.டி அடையாள பட்டை பொருத்தும் திட்டம் நடைமுறையில் உள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கூடுதலாக கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியும் நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News