செய்திகள்
ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்ய ஐகோர்ட்டில் மனு தாக்கல்

Published On 2020-01-23 11:55 GMT   |   Update On 2020-01-23 11:55 GMT
பெரியார் குறித்து சர்ச்சையை கூறிய கருத்தை தெரிவித்த ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்ய ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கோவை:

சென்னையில் கடந்த 14-ந் தேதி துக்ளக் ஆண்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் தந்தை பெரியார் குறித்து பேசினார்.

இதற்கு தி.மு.க. மற்றும் திராவிட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் நடிகர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தனர்.

கோவையில் கடந்த 17-ந் தேதி திராவிடர் விடுதலை கழகத்தினர் மாநகர தலைவர் நேருதாஸ் தலைமையில் போலீஸ் கமி‌ஷனர் அலுவலத்தில் நடிகர் ரஜினிகாந்த் மீது இந்திய தண்டனை சட்டம் 153 ஏ மற்றும் 505 ஐ.பி.சி. ஆகிய சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தனர்.

பின்னர் இந்த புகார் மனு காட்டூர் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு அனுப்பபட்டது. ஆனால் காட்டூர் போலீசார் புகார் கொடுத்தற்கான ஒப்புகை சீட்டை மட்டுமே வழங்கினர். நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குபதிவு செய்யப்படவில்லை.

இந்தநிலையில் நேற்று சென்னை ஐகோர்ட்டில் கோவை மாநகர திராவிடர் விடுதலை கழக தலைவர் நேருதாஸ் தலைமையில் நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்ககோரி மனுதாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த நீதிமன்றம் கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் சுமித்சரண், காட்டூர் இன்ஸ்பெக்டர் லட்சுமி ஆகியோரை எதிர்மனுதாரர்களாக சேர்த்து உத்தரவிட்டது.
Tags:    

Similar News