நகர்ப்புற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றிபெறும்- அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
சிவகாசி:
சிவகாசி அருகே உள்ள ஈஞ்சார் கிராமத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க முப்பெரும் விழா நடை பெற்றது. அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி, கடம்பூர் ராஜூ, சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
சங்க மாநில தலைவர் சந்தானகிருஷ்ணன் தலைமை வகித்தார். விருது நகர் மாவட்ட தலைவர் முருகேசன், துணைத்தலை வர்சீனிவாசன் உட்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் வில்லிஆழ்வார் வரவேற்றார். மாநில முதன்மை பொதுச் செயலாளர் வெங்கடேஸ்வரன், மாநில பொதுச்செயலாளர் செல்வன் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியில் ஏராளமான கிராம நிர்வாக அலுவலர்கள், விருதுநகர் மாவட்ட பொருளாளர் முத்தையா, ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் மச்சராசா, வேண்டுராயபுரம் கூட்டுறவு சங்கத் தலைவர் வேண்டுராயபுரம் காளிமுத்து மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது:-
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்ற இடங்களில் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. இதேபோல் வருகின்ற நகர்ப்புற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றிபெறும்.
கமல்ஹாசன் நான் அரசியல்வாதி என்று அவர் சொல்லக் கூடாது. மக்கள்தான் அவர் அரசியல்வாதி என்று சொல்ல வேண்டும். அந்த பக்குவத்திற்கு முதலில் அவர் வரட்டும்.
மு.க.ஸ்டாலினுக்கு இந்த ஆட்சியில் சிறந்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகின்றது. அதற்காக அவர் பெருமைப்பட வேண்டும். தி.மு.க. ஆட்சியில் பட்டப்பகலில் 2 அமைச்சர்கள் முன்னிலையில் காவல் ஆய்வாளர் வெற்றிவேல் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தமிழக அரசை குறை சொல்ல மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.