search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Kadambur Raju"

    பாரதிய ஜனதா கூட்டணியில் இருப்பதால் நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை கண்டிப்பாக பெற்றுத்தருவோம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டி தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தக வளாகத்தில் அரசு பொருட்காட்சி நடந்து வருகிறது. இதனை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தலில் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி குறையவில்லை. இந்தியா முழுவதும் மோடிதான் மீண்டும் பிரதமராக வரவேண்டும் என மக்கள் வாக்களித்துள்ளனர். ஆனால் இங்கு தமிழகத்துக்கு எதிராக பாரதிய ஜனதா இருப்பது போல சித்தரிப்பு, தொடர்ந்து பல்வேறு வகையில் எதிர்க்கட்சியினர் தவறான பிரசாரம் செய்த காரணத்தால் தமிழக மக்கள் ஒரு மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். தேசிய நீரோட்டத்தோடு சேர்ந்து நாமும் வாக்களித்து இருக்கலாம் என்று இன்று மக்கள் வருத்தப்படுகின்றனர்.

    அதேபோல மக்களவை தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற இடைத்தேர்தலில் 9 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் அ.தி.மு.க. அரசு தொடர வேண்டும் என மக்கள் வாக்களித்துள்ளனர்.

    தி.மு.க.வை பொறுத்தவரை இந்த தேர்தல் முடிவுகள் பெருத்த ஏமாற்றம்தான். மே 23-ந் தேதிக்கு பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் வரும் என ஸ்டாலின் தொடர்ந்து கூறிக் கொண்டிருந்தார். ஆனால் மாற்றம் வரவில்லை. ஸ்டாலினுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சி இருக்கிறது.

    தி.மு.க.வில் 37 எம்.பி.க்கள் இருந்தாலும், நாங்கள் பாரதிய ஜனதாவுடன் கூட்டணியில் இருப்பதால் தமிழர்களின் நலன் கருதி தமிழர்களுக்கு தாங்கள் செய்ய வேண்டிய கடமைகளில் இருந்து தவறாமல் தேர்தல் நேரத்தில் என்னென்ன வாக்குறுதிகள் கொடுத்தோமோ அதனை கண்டிப்பாக பெற்றுத் தருவோம்.

    இந்த பணியை நாங்கள் தான் செய்ய முடியும். தி.மு.க.வில் 37 எம்.பி.க்கள் இருந்தாலும் அவர்களால் இதனை செய்ய முடியாது. எப்படி அவர்கள் சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்கிறார்களோ? அதே போல் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்யலாம். அதைத் தவிர அவர்களால் வேறு எதுவும் சாதிக்க முடியாது. தி.மு.க. பெற்றுள்ளது பயனில்லாத வெற்றி.

    தூத்துக்குடியை பொருத்தவரை கனிமொழி வெற்றி பெற்றிருந்தாலும் கூட, கோவில்பட்டியில் உள்ள தீப்பெட்டி தொழிலுக்கும், கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு பெறுவதற்கும் அவர்களால் குரல் கொடுக்க முடியாது. வெற்றி -தோல்வியைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. தமிழகத்துக்கு தேவையான திட்டங்களைப் பெற்று தரும் வகையில் மத்திய அரசுடன் ஒரு இணக்கமான சூழல் ஏற்பட்டுள்ளது.

    எனவே சாதிப்பது நாங்கள்தான். தமிழர்களின் உரிமைகளைப் பெற்றுத் தருவோம், தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினால் எங்களது ஸ்லீப்பர் செல்கள் மறுபடியும் வருவார்கள் என தினகரன் கூறியது நல்ல ஜோக்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கமல்ஹாசனுக்கு நாங்கள் பதில் சொல்வது வீணான வேலை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். #MinisterKadamburRaju #KamalHaasan
    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.

    பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை அரசு விழாவாக கொண்டாடப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட மெரினா கடற்கரையில் ரூ.50.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவாலயம் கட்டப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

    அடுத்த ஆண்டு நினைவு நாள் வருவதற்குள் இந்தியாவிலேயே எந்த தலைவருக்கும் இல்லாத ஒரு நினைவாலயமாக உருவாக்கப்படும். அதே போல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை ரூ.20 கோடி செலவில் நினைவு இல்லமாக மாற்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

    கோவில்பட்டியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் பிரிவுக்கு கூடுதல் கட்டடம் கட்ட ரூ.15 கோடியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்ட உடன், கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டப்படும்.

    ஒரு அரசியல் தலைவருக்கான இலக்கணம் கமலுக்கு இல்லை. எதை சொன்னாலும் பொத்தாம் பொதுவாக படத்தில் வேண்டுமென்றால் வசனம் பேசலாம். எந்த மாண்பு குறைந்து விட்டது, யாருடைய மாண்பு குறைந்து விட்டது என்று அவர் சொன்னால் பதில் அளிக்கலாம். ஆனால், அவருக்கெல்லாம் நாங்கள் பதில் சொல்வது வீணான வேலை. அவருக்கு அரசியல் அரிச்சுவடியே தெரியாமல், ஆழம் தெரியாமல் காலை விட்டுக்கொண்டு முழித்துக் கொண்டிருக்கிறார்.

    மாண்பு போய் விட்டது என்று சொன்னால், ஒரே இடத்தில் பத்திரிகையாளர்களை வைத்துக்கொண்டு சந்திக்க தயார். அவர் தயாரா?. அவரது மாண்பு, மரியாதை, மானம் வேண்டுமானால் போகலாம். இன்று அரசியலுக்கு வந்த பின்னர் அதனை தக்க வைத்துக்கொள்ள அவருக்கு தெரியவில்லை. இதுவரை பேசிய எதையும் நிரூபிக்க தவறிய கமல்ஹாசன் மக்களால் நிராகரிக்கப்படுவார். அரசியலில் மட்டுமல்ல பொதுவாழ்வில் இருந்தும் அவர் காணாமல் போவார்.



    எங்கள் கூட்டணியை பற்றி தி.மு.க.வுக்கு என்ன கவலை. கனிமொழி 2ஜி ஸ்பெக்டரம் வழக்கில் சிக்கிய நேரத்தில், பழத்தை சாப்பிட்டவர் ஒருவர், அதனை பார்த்துக் கொண்டிருந்தவர் மீது வழக்கா என அப்போதைய தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்தார். காங்கிரஸ்காரர்களுக்கு அதில் தொடர்பு உண்டு என மறைமுகமாக சொன்னதோடு மட்டுமில்லாமல் அவர்களெல்லாம் வழக்கில் சேர்க்கப்படாமல் கனிமொழி, ராசாவை மட்டும் சேர்த்ததற்காக கூடா நட்பு கேடாய் முடியும் எனவும் தெரிவித்தார்.

    எங்கள் கூட்டணியை பார்த்து நாங்கள் கூறவில்லை. 2ஜி ஸ்பெக்டரம் வழக்கு வந்த உடனே நாங்கள் தெரியாமல் அவர்களுடன் கூட்டணி சேர்ந்துவிட்டோம். கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை நாங்கள் அனுபவிக்கிறோம் என காங்கிரசை சொன்னார். அந்த காங்கிரசுடன் இன்று கூட்டணி வைத்துள்ளனர். யார் முரண்பாடான கூட்டணி வைத்துள்ளனர் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும்.

    இது கொச்சைப்படுத்துகின்ற வார்த்தை. தேர்தல் வரும் நேரத்தில் கொள்கைகள் வேறாக இருக்கலாம். தேர்தலை சந்திப்பதற்காக கூட்டணி வைப்பது காலம் காலமாய் நடந்து வருகிறது. பேரறிஞர் அண்ணாவும், மூதறிஞர் ராஜாஜியும் எதிர்மறை கொள்கைகள் கொண்டவர்கள். ஆனால், தேர்தல் கூட்டணியாக காங்கிரஸ் கட்சியை வீழ்த்த வேண்டும். இங்கே திராவிட பாரம்பரியம் வர வேண்டும் என்று அண்ணா கூட்டணி அமைத்தார்.

    கொள்கை வேறு, கூட்டணி வேறு. கூட்டணி என்பது அவர்களது விருப்பம். நாங்கள் அதனை விமர்சனம் செய்யவில்லை. அதே போல் இது எங்களுடைய விருப்பம். கனிமொழி பாராளுமன்ற உறுப்பினராகவும், மகளிரணி செயலாளராகவும் உள்ளார். ஆனால் தரமில்லாமல் விமர்சிக்கிறார். இது மக்களிடையே எடுபடாது.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterKadamburRaju #KamalHaasan
    கருத்துகணிப்புகளை பொய்யாக்கி பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அதிக இடங்களை கைப்பற்றும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். #ministerkadamburraju #admk #parliamentelection

    கோவில்பட்டி:

    விளாத்திகுளத்தில் இசை மாமேதை நல்லப்ப சுவாமிகளுக்கு ரூ. 20 லட்சத்தில் நினைவுத் தூண் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள் அப்படியே பிரதிபலிக்கும் என்பது எந்த காலத்தில் நடந்துள்ளது. சென்ற பாராளுமன்ற தேர்தலின்போது தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 37 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என எந்த கருத்து கணிப்பிலும் வரவில்லை.

    ஆனால் அதையெல்லாம் பொய்யாக்கும் விதமாக அ.தி.மு.க. தனியாக போட்டியிட்டு 37 இடங்களில் வெற்றி பெற்றது. கருத்துக் கணிப்புகள் எல்லாம் பொய்யாக்கி அ.தி.மு.க. தான் அதிகப்படியான இடங்களில் வெற்றி பெற்றது என்ற வரலாற்றை இந்த முறையும் உருவாக்குவோம்.

    கோடநாடு விவகாரத்தில் முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்த நேரத்தில் ஜாமீனில் வெளியே வந்தார்கள். மேலும் ரூ. 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மானநஷ்ட வழக்கு தொடர்ந்து மேற்கொண்டு அது தொடர்பாக பேசக்கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    உயர் நீதிமன்றம் அந்த வழக்கை ஏற்றுக் கொண்டு கோடநாடு சம்பந்தமாக ஊடகத்தில் பேட்டி எதுவும் தரக்கூடாது என தடை விதித்துள்ளது. இதில் முதல்வருக்கு துளிகூட சம்பந்தம் இல்லை என நிரூபித்துள்ளார்.

    இன்றைக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விவரம் இல்லாமல் நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளார். நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. ஆனால் அவர்கள் கவர்னர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். அரசு ஊழியர்- ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிச்சயமாக அரசு ஏற்றுக் கொள்ளும். அதற்குரிய பேச்சு வார்த்தைக்கான பணிகளை அரசு செய்து வருகிறது.

    இவ்வாறு அமைச்சர் கூறினார். #ministerkadamburraju #admk #parliamentelection

    திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் வருகிற மார்ச் மாதத்துக்குள் கட்டி முடிக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். #KadamburRaju #SivanthiAditanar #Manimandapam
    திருச்செந்தூர்:

    பத்திரிகை, கல்வி, விளையாட்டு, ஆன்மிகம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தூத்துக்குடியில் கடந்த 22-11-2017 அன்று நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    அதன்படி திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினம் சிவந்தி அகாடமி வளாகத்தில் 60 சென்ட் நிலத்தில் ரூ.1 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் முழுஉருவ சிலையுடன் மணிமண்டபம் அமைக்கப்படுகிறது.

    இந்த மணிமண்டபத்தில் பூங்கா, நூலகம் மற்றும் மணிமண்டபத்துக்கு வருகின்ற பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதி நடந்தது. சென்னையில் இருந்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

    தொடர்ந்து திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் கட்டும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று மாலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் செயல்படும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 22-ந்தேதி தூத்துக்குடியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

    படிக்காத பாமரர்களுக்கும் ‘தந்தி’ பத்திரிகை மூலம் தமிழ் கற்று கொடுத்து படிக்க வைத்தவர் ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார். அவரது வழியில் அவருடைய மைந்தர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் ‘தினத்தந்தி’ பத்திரிகையின் மூலம் தமிழக மக்களுக்கு பெரும் தொண்டாற்றினார். மேலும் அவர் கல்வி, விளையாட்டு, ஆன்மிகத்திலும் சிறந்து விளங்கினார்.

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் ஒலிம்பிக் சங்க தலைவராக திறம்பட பணியாற்றினார். அவர் எண்ணற்ற கோவில்களில் திருப்பணிகளை நடத்தினார். அவர் ஏழை எளிய மக்களுக்கு கொடை வள்ளலாக திகழ்ந்தார். அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில், அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படுகிறது.



    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டியவுடன் மழைக்காலம் தொடங்கியது. திருச்செந்தூர் கடலோரத்தில் இருப்பதால் நிலத்தடி நீர் கசிவு இருந்தது. எனவே தற்போது பணிகள் தொடங்கப்பட்டு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இன்னும் 2 மாதங்களில் மணிமண்டப கட்டுமான பணிகள் நிறைவு பெறும். டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் வருகிற மார்ச் மாதத்துக்குள் கட்டி முடிக்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். #KadamburRaju #SivanthiAditanar #Manimandapam
    சினிமா போல நினைத்துக்கொண்டு அரசியல் பேசுகிறார் கமல்ஹாசன் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். #KadamburRaju #KamalHaasan
    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொடநாடு பிரச்சினை தொடர்பாக முதல்வர் ஏற்கனவே கூறி விட்டார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அது பற்றி கருத்து கூற முடியாது. சினிமாவில் நடித்ததால் நடிகர் கமல்ஹாசனுக்கு எல்லாமே கதையாக தெரிகிறது. கதையும் இல்லை, கற்பனையும் இல்லை. கோடநாடு பிரச்சினையில் முதல்வருக்கு துளி கூட சம்பந்தம் இல்லை.



    அரசியலுக்கு லாயக்கு இல்லாமல், சினிமா போல நினைத்துக்கொண்டு அரசியல் பேசுகிறார் கமல்ஹாசன், தி.மு.க. நல்ல வி‌ஷயங்களை என்றும் கையில் எடுத்தது கிடையாது. பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு கொடுத்ததை பாராட்டியது கிடையாது.

    கஜா புயலின்போது தமிழக அமைச்சர்கள் அங்கு நேரில் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர், இதனை அனைவரும் பாராட்டினார்கள்.

    ஆனால் தி.மு.க. பாராட்டவில்லை. குற்றம் சொல்லியே பேர் வாங்கவேண்டும் என்ற பட்டியலில் மு.க.ஸ்டாலின் உள்ளார். மேலும் கூட்டணி பற்றி முதல்வர், துணை முதல்வர், தலைமைக் கழக நிர்வாகிகள் முடிவு செய்வார்கள், கற்பனையான, ஊர்ஜிதம் இல்லாத தகவலுக்கு கருத்துக்கூற முடியாது. ஜல்லிக்கட்டு போட்டிகள் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி நடைபெற்று வருகிறது.

    தூத்துக்குடியில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக ஆரம்பத்தில் ஆணை கொடுக்கப்பட்டபோது தூத்துக்குடி மாவட்டம் இடம்பெறவில்லை, இனிமேல் மேல்முறையீடு செய்து உத்தரவு வாங்கும்போது போட்டிகள் நடத்த முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார். #KadamburRaju #KamalHaasan

    தமிழகம் முழுவதும் அம்மா திரையரங்கம் அமைப்பது குறித்து வருகிற சட்டமன்ற மானிய கோரிக்கையின் போது அரசு பரிசீலிக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். #MinisterKadamburRaju
    கோவில்பட்டி:

    தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொங்கல் திரைப்படங்கள் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கவில்லை என தமிழக அரசு அறிவித்திருந்தது. சென்னையில் உள்ள ஒரு சில தியேட்டர்களில் சிறப்பு காட்சியை திரையிடவில்லை என கூறி, அதற்கான டிக்கெட் முன்பதிவு பணத்தை திரும்ப ஒப்படைத்துள்ளனர்.

    ஆனால் சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது என்று வந்த தவறான தகவலால் தான் நாங்கள் சிறப்பு காட்சி திரையிட்டோம் என சில இடங்களில் கூறியுள்ளனர். இருந்தாலும் அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முதற் கட்டமாக அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதனை மீறி சிறப்பு காட்சி ஒளிப்பரப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    முறைப்படி அனுமதி கேட்டால், பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு காட்சிகள் திரையிட அரசு பரிசீலனை செய்யும். அம்மா திரையரங்கம் என்பது மாநகராட்சிக்கு மட்டும் தான் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் அம்மா திரையரங்கம் அமைப்பது குறித்து வருகிற சட்டமன்ற மானிய கோரிக்கையின் போது அரசு பரிசீலிக்கும்.

    திரையரங்குகளில் விற்கப்படும் உணவு பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய சொல்லியுள்ளோம். வெளியிலிருந்து கொண்டு செல்லும் உணவு பொருட்களை தடை செய்யக்கூடாது என உத்தரவு வழங்கி உள்ளோம். விரைவில் இவை அனைத்துக்கும் நிரந்தர தீர்வு காணப்படும் வகையில் திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

    நல்ல திட்டங்களையும் மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களையும் தடுக்கின்றனர் என்பது தான் எதிர்க்கட்சியின் வேலை என்பது மக்களுக்கு தெளிவாக தெரிந்துள்ளது.

    அ.தி.மு.க. தேர்தல் கூட்டணி தொடர்பாக தம்பிதுரை தெரிவித்தது அவரது சொந்த கருத்து. அவருக்கு அதிகாரம் இல்லை என்று சொல்வதற்கு, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் அதிகாரம் இல்லை. வருகிற 20-ந் தேதி எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவாகவும், தேர்தல் பிரசாரத்தின் தொடக்கமாகவும் நெல்லையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதில் தமிழக முதல்வர் பங்கேற்கிறார்.

    தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் கூட்டணி தொடர்பான நிலைப்பாட்டை கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பார்கள். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. தற்போது எவ்வித கருத்தையும் தெரிவிக்க முடியாது. விசாரணை கமிசன் அறிக்கை வந்த பின்பு ஜெயலலிதா மரணத்தில் உள்ள உண்மைகள் வெளிவரும்.

    இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். #MinisterKadamburRaju
    தமிழக அரசு மேல்முறையீடு மூலமாக சாதகமான தீர்ப்பை பெற்று, நிச்சயமாக அனைவருக்கும் பொங்கல் பரிசு தொடர்ந்து வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். #PongalGift
    கோவில்பட்டி:

    கழுகுமலை, வானரமுட்டி அரசு பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கி தமிழக அரசின் சாதனைகளை விளக்கி பேசினார். இதில் கழுகுமலை பள்ளியில் 255 பேருக்கும், வானரமுட்டி பள்ளியில் 115 பேருக்கும் சைக்கிள் வழங்கப்பட்டன.

    பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் முதன் முதலாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் ரூ.100 வழங்கினார். அதுபோல் தற்போது முதல்வர் அந்த திட்டத்தை விரிவாக்கம் செய்து, காலத்துக்கு தகுந்தாற்போல் பொங்கல் பரிசுடன் ரூ. 1000 வழங்கி நடைமுறைப்படுத்தி உள்ளார். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது.

    தமிழக அரசு மேல்முறையீடு மூலமாக சாதகமான தீர்ப்பை பெற்று, நிச்சயமாக அனைவருக்கும் பொங்கல் பரிசு தொடர்ந்து வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும்.


    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடங்க 16.10.1996-ல் தி.மு.க. ஆட்சியில் தான் முதன் முதலில் உத்தரவு வழங்கப்பட்டது. 2007-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த ஆலையை விரிவாக்கம் செய்ய சிப்காட் வளாகத்தில் 245 ஏக்கர் ஒதுக்க கையெழுத்திட்டது அன்றைக்கு தொழில் துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் தான். அப்போதே ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் ஜெயலலிதா. தற்போது உச்சநீதிமன்றத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவு செயல்படுத்த தடையில்லை என தீர்ப்பளித்துள்ளது.

    இந்த தீர்ப்பின் சாராம்சம் வந்த உடன், சட்ட வல்லுநர்களுடன் ஆராய்ந்து மீண்டும் சீராய்வு மனு தாக்கல் செய்து அதன் மூலமாக ஆலையை நிறுத்துவதற்கு நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என சட்டமன்றத்தில் முதல்வர் கூறியுள்ளார். அந்த நிலைப்பாட்டில் அரசு உறுதியாக உள்ளது.

    இவ்வாறு அமைச்சர் கூறினார். #PongalGift #MinisterKadamburRaju
    பேட்ட, விஸ்வாசம் படங்களின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கிடையாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். #Petta #Viswasam #MinisterKadamburRaju
    விருதுநகர்:

    ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் போன்றவை பொங்கல் விருந்தாக நாளை (10-ந்தேதி) வெளியாக உள்ளனன. இந்த படத்தின் சிறப்பு காட்சிகள் அறிவிக்கப்பட்டு ரசிகர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

    இந்த நிலையில் பேட்ட, விஸ்வாசம் படங்களின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விருதுநகரில் இன்று நிருபர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ இதனை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    பேட்ட, விஸ்வாசம் படங்கள் நாளை திரைக்கு வர உள்ளது. இந்த படங்களின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை. தியேட்டர்களில் சரியான கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். கூடுதலாக வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    முதல் தடவையாக ரூ. 50 ஆயிரமும், இரண்டாம் கட்டமாக ரூ. 1 லட்சமும் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் திரையரங்கு உரிமம் ரத்து செய்யப்படும்.

    பொது பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எதிர்த்து வந்தார். அதே நிலைப்பாடுதான் தற்போதைய தமிழக அரசுக்கும் உள்ளது.


    ஒவ்வொரு பிரச்சனையிலும் ஜெயலலிதா என்ன நிலைப்பாடு கொண்டிருந்தாரோ அதையே நாங்களும் கடைப்பிடிக்கிறோம். இதனால்தான் பாராளுமன்றத்தில் தம்பிதுரை வெளிநடப்பு செய்தார். மத்திய அரசுக்கு அடிபணிந்து நாங்கள் நடக்க மாட்டோம்.

    ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் முழு உத்தரவு கிடைத்த பிறகே தமிழக அரசு முடிவெடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Petta #Viswasam #MinisterKadamburRaju
    பிளாஸ்டிக் தயாரிப்பாளர்கள் மாற்று தொழில் தொடங்குவதற்கு அரசு உறுதுணையாக இருக்கும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். #MinisterKadamburRaju
    கோவில்பட்டி:

    செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் போஸின் மறைவை தொடர்ந்து அந்த தொகுதி காலியாக இருந்தது. திருவாரூரில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவை தொடர்ந்து அந்த தொகுதியும் காலியாக இருந்தது. திருப்பரங்குன்றத்தில் நடந்த தேர்தல் தொடர்பாக தி.மு.க.வைச் சேர்ந்த சரவணன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் திருவாரூரில் மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இடைத்தேர்தலை அறிவிப்பதற்கு முன்பாகவே அ.தி.மு.க. தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது. திருப்பரங்குன்றத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்ற சைக்கிள் பேரணி நடந்தது.



    ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் வரலாற்றிலேயே முதல் முறையாக 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் நிவாரண பணிகளை மேற்கொண்டனர். அங்கு ரூ.1,000 கோடிக்கு அதிகமான நிவாரண பொருட்களை வழங்கினோம். அந்த நன்றி உணர்வுடன் பொதுமக்கள் திருவாரூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரை அமோக வெற்றி பெறச் செய்வார்கள்.

    கடந்த 6 மாதங்களுக்கு முன்னரே சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் ஜனவரி 1-ந்தேதியில் இருந்து பிளாஸ்டிக் தடை செய்யப்படும் என்று அறிவித்தார். எனவே பிளாஸ்டிக் தடைக்கு போதிய கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    இதற்காக ரூ.54 லட்சம் செலவில் தமிழகத்தில் 5 மண்டலங்களாக கருத்தரங்குகள், மனித சங்கிலி போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு உள்ளது. பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையை பொதுமக்கள் 100 சதவீதம் ஏற்றுக்கொண்டுள்ளனர். பிளாஸ்டிக் தயாரிப்பாளர்கள், மாற்று தொழில் தொடங்குவதற்கு அரசு உறுதுணையாக இருக்கும்.

    இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். #MinisterKadamburRaju
    வருகிற இடைத்தேர்தலில் துரோகிகளுக்கு பாடம் புகட்டுவோம் என்று அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர்கள் பேசினார்கள். #admk #byelection

    கோவில்பட்டி:

    விளாத்திகுளத்தில் அ.தி.மு.க. சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர்கள் வேலுமணி, கடம்பூர் ராஜூ, ராஜலெட்சுமி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்.எல்.ஏ.க்கள் முருகையாபாண்டியன், செல்வமோகன் தாஸ் பாண்டியன் , மாவட்ட செயலாளர் சி.த. செல்லபாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், மோகன், சின்னப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் அமைச்சர் ராஜலெட்சுமி பேசியதாவது:-

    ஏழை,எளிய மக்கள் வாழ்வாதாரத்திற்கு திட்டங்களை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தந்தார். அதனால் தான் ஆண்ட கட்சிக்கு மீண்டும் மக்கள் வாய்ப்பு தந்தார்கள். அவர் மறைவுக்குப் பின் சிலர் துரோகம் செய்து விட்டு சென்றதால் தேர்தல் வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றார்.

    பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது:-

    திருப்பரங்குன்றம், திருவாருர் தேர்தல் இயற்கையான தேர்தல், மற்ற 18 தொகுதிக்கான தேர்தல் செயற்கையான தேர்தல், மக்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்ற இரட்டை இலைக்கு தான் வாக்களித்தனர். வேட்பாளர்களை பார்த்து கிடையாது. வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட கட்சிகளை தி.மு.க. தாங்கி கொண்டு இருக்கும் நிலையில் உள்ளது. வரும் தேர்தல் எதிரிகளை மட்டுமல்ல துரோகிகளை சேர்த்து வீழ்த்தி அவர்களுக்கு ஒரு படிப்பினையை கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் பேசினார்.

    துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில், இந்த தேர்தல் அரசியல் மாற்றத்திற்க்கான தேர்தல். இதில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். கட்சிக்கும், ஆட்சிக்கும் துரோகம் செய்தவர்களுக்கு பாடம் புகட்ட கூடிய தேர்தல். அ.தி.மு.க. கூட்டணி பற்றி கவலைப்படாமல் தேர்தல் பணிகளை பார்த்து வருகிறது. அ.தி.மு.க தனித்து நிற்க தயார், தி.மு.க. தயாரா?. அ.தி.மு.க. 20 தொகுதியிலும் வெற்றி பெறும் என்றார்.

    முடிவில் வேலுமணி பேசுகையில், அ.தி.மு.க.வினர் ஒற்றுமையாக இருந்து, வேட்பாளர் யாராக இருந்தாலும் உழைக்க வேண்டும். தன் உயிரைக் கொடுத்து ஜெயலலிதா அமைத்த ஆட்சியை தூரோகிகள் கவிழ்க்க பார்க்கிறார்கள், அந்த துரோகிகளுக்கு பாடம் புகட்ட ஒவ்வொரு தொகுதியிலும் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் ஆவின் தலைவர் சின்னத்துரை, ராஜகோபால் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிர்வாகியின் ஒருவர் மகனின் மருத்துவ செலவுக்கு அ.தி.மு.க. சார்பில் ரூ. 1 லட்ச நிதியை அமைச்சர் வேலுமணி வழங்கினார்.  #admk #byelection

    கயத்தாறு அருகே கடம்பூரில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிய நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. இதை அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்து வைத்தார். #ministerkadamburraju
    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள கடம்பூர் ரெயில்வே பீடர் ரோட்டில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. இதை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு திறந்து வைத்து பேசினார். 

    இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, கோவில்பட்டி ஆர்.டி.ஓ. (பொறுப்பு) சங்கர நாராயணன், கயத்தாறு தாசில்தார் லிங்கராஜ், கடம்பூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் நாகராஜா, பேரூராட்சி நிர்வாக அலுவலர் ராதாகிருஷ்ணன், கயத்தாறு ஒன்றிய செயலாளர் வினோபாஜி, கடம்பூர் நகர செயலாளர் சமுத்திரராஜி, பேரவை ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி, கடம்பூர் பேரவை செயலாளர் மோகன், முன்னாள் ஒன்றிய  கவுன்சிலர் பாலமுருகன், நெல்லை ஆவின் தலைவர் என்.சின்னத்துரை, முன் னாள் எம்.எல்.ஏ.க்கள் மோகன் சின்னப்பன், ஈஸ்வர பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #ministerkadamburraju
    எஸ்.எம்.எஸ். கொடுத்தால் ஆவின் பால் பொருட்களை வீடுதேடி வினியோகம் செய்யும் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். #AavinMilk #MinisterKadamburRaju
    தூத்துக்குடி:

    ஆவின் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    பால் உற்பத்தியில் இந்தியாவில் முதல் இடத்தில் குஜராத் இருந்தது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பால் உற்பத்தியை பெருக்குவதற்காக இலவச கறவை பசுக்கள், வெள்ளாடுகளை வழங்கினார். அதன்பேரில் தற்போது தமிழ்நாடு பால் உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ளது. இதனால் வெண்மை புரட்சி ஏற்பட்டு உள்ளது. பால் உற்பத்தியை பெருக்குவதற்காக கால்நடைகளுக்கு அரசு தீவனம் வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

    சைக்கிள் மூலம் ஆவின் பால் விற்பனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். தனியாருக்கு சற்றும் குறைவு இல்லாமல் ஊக்கத்தொகை கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆவின் பால் 100 சதவீதம் சுத்தமான பால் ஆகும். ஆவின் பால் பூத்களுக்கு தேவையான பொருட்கள் உடனடியாக வழங்கப்படும். எஸ்.எம்.எஸ். கொடுத்தாலே பால் பொருட்களை வீடுதேடி வினியோகம் செய்யும் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது.


    பால் கொள்முதல் விலை உயர்த்துவது தொடர்பாக முதல்அமைச்சர் நல்ல அறிவிப்பை தருவார். ஆவின் பால் பூத்களில் ஆவின் தவிர மற்ற பொருட்கள் விற்பனை செய்தவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சத்துணவில் மாணவர்களுக்கு பால் வழங்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Aavin #MinisterKadamburRaju
    ×