செய்திகள்
வில்லியனூர் அருகே என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை
வில்லியனூர் அருகே நண்பர்களுடன் ஊர் சுற்றியதை பெற்றோர் கண்டித்ததால் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வில்லியனூர்:
வில்லியனூர் அருகே கோபாலன்கடை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமு (வயது53). இவர் தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் அரிபாஸ்கர் (22) இவர் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த ஒரு வாரமாக அரிபாஸ்கர் சரிவர கல்லூரிக்கு செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வந்தார். மேலும் செல்போனில் அடிக்கடி நண்பர்களுடன் பேசி வந்தார். இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் கடந்த 2 நாட்களாக அரிபாஸ்கர் மனமுடைந்த நிலையில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் திடீரென தற்கொலை முடிவை கையில் எடுத்த அரிபாஸ்கர் நேற்று மாலை தனது வீட்டின் அருகே உள்ள வேப்பமரத்தில் நைலான் கயிற்றால் தூக்குபோட்டு தொங்கினார். அக்கம் பக்கத்தினர் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து பின்னர் அரிபாஸ்கரை தூக்கில் இருந்து மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அரிபாஸ்கர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் விலலியனூர் போலீஸ் ஏட்டு குப்புசாமி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.