பழனி அருகே மது பழக்கத்தால் தந்தை குத்தி கொலை- வளர்ப்பு மகன்கள் ஆத்திரம்
பழனி:
பழனி அருகே போடுவார் பட்டியை சேர்ந்தவர் ராமசாமி (வயது56). இவர் கடந்த சில வருடங்களாக வேறு ஒரு குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது வளர்ப்பு மகன்கள் வசந்த் (19), சதீஷ் (22). கடந்த சில நாட்களாக ராமசாமி மது பழக்கத்துக்கு அடிமையானதால் வீட்டில் தகராறு ஏற்பட்டது.
எனவே மது பழக்கத்தை கைவிடுமாறு 2 மகன்களும் எச்சரித்துள்ளனர். ஆனால் தொடர்ந்து மது குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்தார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.
சம்பவத்தன்றும் ராமசாமி குடிபோதையில் வந்ததால் ஆத்திரம் அடைந்த வசந்த் மற்றும் சதீஷ் ஆகியோர் கத்தியால் ராமசாமியை சரமாரியாக குத்தினர்.
இதில் படுகாயம் அடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராமசாமி உயிரிழந்தார். இதுகுறித்து சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 மகன்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.