என் மலர்
நீங்கள் தேடியது "Palani"
- அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாகவும் பழனி முருகன் கோவில் திகழ்கிறது.
- திருவிழா காலங்களில் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
உலக பிரசித்தி பெற்ற ஆன்மிக தலமாகவும், அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாகவும் பழனி முருகன் கோவில் திகழ்கிறது. இங்கு முருகப்பெருமானை தரிசிக்க தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
குறிப்பாக திருவிழா காலங்களில் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இதேபோல் முகூர்த்தம், வாரவிடுமுறை நாட்களிலும் பழனிக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்படும்.
அந்தவகையில் தற்போது கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்நிலையில் நேற்று வாரவிடுமுறை என்பதால், பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காலை முதலே கோவிலின் தரிசன வழிகள், மலைக்கோவிலுக்கு செல்லும் பாதைகள் ஆகிய இடங்களில் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
இதேபோல் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல பக்தர்கள் பயன்படுத்தி வரும் ரோப்கார், மின்இழுவை ரெயில்நிலையங்களிலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். கூட்டம் அலைமோதியதால் சுமார் 2 மணி நேரம் காத்திருந்த பின்பே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கிடையே நேற்று கேரள மாநில பக்தர்கள் 10 பேர், 12 அடி நீள அலகு குத்தி வந்து கிரிவீதிகளில் வலம் வந்தது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தனர். பழனிக்கு கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் பக்தர்கள் வந்ததால் அடிவாரம் ரோடு, பூங்கா ரோடு, கிரிவீதி பகுதிகளில் கடும் நெரிசல் காணப்பட்டது. இதேபோல் சாமி தரிசனம் செய்த பிறகு பக்தர்கள், தங்களது ஊருக்கு திரும்புவதற்காக பழனி பஸ் நிலையத்தில் குவிந்ததால் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
- 1-ந்தேதி முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.
- 2-ந்தேதி மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாக போற்றப்படும் பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் வைகாசி விசாக திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படும். இவ்வருடத்திற்கான திருவிழா இன்று பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு விநாயகர் பூஜை, புண்ணியாகவாஜனம், கொடிப்பட பூஜை நடைபெற்றது.
இதனைதொடர்ந்து கோவில் கொடிமரத்தில் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி முருகனை வழிபட்டனர். திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் காலையில் தந்தப்பல்லக்கில் முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானை திருவுலாவும், இரவில் வெள்ளிகாமதேனு, ஆட்டுக்கிடா, யானை, பிடாரி, மயில் மற்றும் தங்கமயில், தங்ககுதிரை, புதுச்சேரி சப்பரம் போன்ற வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. 6-ம் நாள் விழாவாக வருகிற ஜூன் 1-ந்தேதி இரவு 7.15 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும் , அதனைதொடர்ந்து வெள்ளிமயில் வாகனத்தில் சாமி வீதிஉலாவும் நடைபெறுகிறது.
7-ம் நாள் விழாவாக ஜூன் 2-ந்தேதி வைகாசி விசாகத்தன்று பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசாமி தோளுக்கிணியாள் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதனைதொடர்ந்து காலை 9 மணிக்கு திருத்தேரேற்றமும், மாலை 4.30 மணிக்கு தேரோட்டமும் நடைபெறுகிறது. பின்னர் இரவில் பெரியதந்தப்பல்லக்கில் தேர்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவையொட்டி தினமும் மாலை 6.30 மணிக்கு சிறப்பு சமயசொற்பொழிவு, இன்னிசை, நாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணைஆணையர் நடராஜன், துணைஆணையர் பிரகாஷ் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional
- இந்த திட்டம் முக்கிய விசேஷ நாட்கள் என மொத்தம் 44 நாட்கள் செயல்படுத்தப்பட மாட்டாது.
- இந்த தரிசன சேவைக்கு பக்தர் ஒருவருக்கு ரூ.300 கட்டணம் வசூலிக்கப்படும்.
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு சாமி தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாக அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்வதற்கு படிப்பாதையை தவிர ரோப்கார், மின்இழுவை ரெயில் சேவைகள் உள்ளன. அதேபோல் கோவிலில் பொது தரிசனம் மட்டுமல்லாது விரைவாக தரிசனம் செய்யும் வகையில் ரூ.10 மற்றும் ரூ.100 கட்டண தரிசன வழிகள் உள்ளன. இதன் வழியே முதியோர்கள், குழந்தைகளுடன் வருவோர் என ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் அதிகளவு பக்தர்கள் வரும் பிரதான கோவில்களில் "இடைநிறுத்த தரிசனம்" (பிரேக் தரிசனம்) வசதி ஏற்படுத்தப்படும் என கடந்த சட்டமன்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்திலேயே அதிக பக்தர்கள் வந்துசெல்லும் பழனி முருகன் கோவிலில் "இடைநிறுத்த தரிசன சேவை" தொடங்குவது குறித்த அறிவிப்பு நோட்டீஸ் கோவில் அலுவலகத்தில் ஒட்டப்பட்டு உள்ளது. அந்த நோட்டீசில் கூறப்பட்டு உள்ளதாவது:-
பழனி முருகன் கோவிலில் "இடைநிறுத்த தரிசன சேவை" திட்டம் தொடங்கினால் மாலை 3 மணி முதல் 4 மணி வரை ஒரு மணி நேரம் தரிசனம் செய்ய நேரம் ஒதுக்கப்படும். இந்த சேவை தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் நடைபெறும் 10 நாட்கள், மாத கிருத்திகை, தமிழ்ப்புத்தாண்டு, ஆங்கில புத்தாண்டு உள்பட முக்கிய விசேஷ நாட்கள் என மொத்தம் 44 நாட்கள் செயல்படுத்தப்பட மாட்டாது.
இந்த தரிசன சேவைக்கு பக்தர் ஒருவருக்கு ரூ.300 கட்டணம் வசூலிக்கப்படும். அவ்வாறு தரிசனம் செய்வோருக்கு கோவில் சார்பில் பஞ்சாமிர்தம் டப்பா, தேங்காய், பழம், திருநீறு, மஞ்சப்பை அடங்கிய தொகுப்பு வழங்கப்படும். மேலும் இந்த தரிசன சேவை குறித்து பக்தர்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை அல்லது ஆலோசனை கருத்துக்கள் இருந்தால் எழுத்து பூர்வமாக அடுத்த மாதம் (ஜூன்) 16-ந்தேதிக்குள் கோவில் அலுவலகத்தில் நேரடியாக கொடுக்கலாம். அல்லது இணை ஆணையர், தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில், பழனி என்ற முகவரிக்கு தபாலில் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- 1-ந்தேதி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.
- 2-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
கலியுக கடவுளான முருகப்பெருமானின் ஒவ்வொரு நிகழ்வும் ஒரு திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி அனைத்து முருகன் கோவில்களிலும் கொண்டாடப்படும் விழாக்களில் வைகாசி விசாக திருவிழாவும் ஒன்று.
உலக உயிர்களின் இன்னல்களை அழிக்க, வைகாசி மாதத்தில் பவுர்ணமியையொட்டி வரக்கூடிய விசாக நட்சத்திரத்தில் முருகப்பெருமான் அவதரித்த நாளே வைகாசி விசாக திருநாளாகும்.
சிறப்பு வாய்ந்த இத்திருவிழா, பழனி முருகன் கோவிலில் வருகிற 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் காலையில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கொடிபட பூஜை நடக்கிறது. இதையடுத்து காலை 11.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது.
10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினசரி காலையில் தந்தப்பல்லக்கில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருவுலாவும், இரவில் வெள்ளியால் ஆன காமதேனு, ஆட்டுக்கிடா, யானை, பிடாரி மயில் மற்றும் தங்கமயில், தங்கக்குதிரை, புதுச்சேரி சப்பரம் போன்ற வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது.
விழாவின் 6-ம் நாளான ஜூன் 1-ந்தேதி இரவு 7.15 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், பின்னர் வெள்ளி மயில் வாகனத்தில் திருவுலாவும் நடைபெறுகிறது.
7-ம் நாளான ஜூன் 2-ந்தேதி வைகாசி விசாக தினத்தன்று பெரியநாயகி அம்மன் கோவிலில், முத்துக்குமாரசுவாமி தோளுக்கினியான் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதையடுத்து காலை 9 மணிக்கு திருத்தேரேற்றமும், மாலை 4.30 மணிக்கு தேரோட்டமும் நடைபெறுகிறது. பின்னர் இரவில் பெரிய தந்தப்பல்லக்கில் தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
10-ந்தேதி கொடி இறக்குதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவையொட்டி தினமும் மாலை 6.30 மணிக்கு சிறப்பு சமய சொற்பொழிவு, இன்னிசை, நாட்டியம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
- கிரிவலத்தின்போது கடம்ப மலர்களை பெண்கள் சூட்டி கொள்கின்றனர்.
- கழுதிருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெறுகிறது.
பழனி முருகன் கோவிலில் கோடைகாலத்தில் அக்னி நட்சத்திர கழுதிருவிழா கொண்டாடப்படுகிறது. சித்திரை மாத கடைசி 7 நாட்கள், வைகாசி மாத முதல் 7 நாட்கள் என 14 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த நாட்களில் பக்தர்கள் காலை, மாலை வேளையில் பழனி கிரிவீதிகளில் வலம் வந்து முருகப்பெருமானை வழிபடுகின்றனர். அவ்வாறு கிரிவலம் வரும்போது சுத்தமான சஞ்சீவி காற்று வீசும் என்றும், இதனால் உடல் புத்துணர்ச்சி பெறும் என்பது நம்பிக்கை. மேலும் கிரிவலத்தின்போது கடம்ப மலர்களை பெண்கள் சூட்டி கொள்கின்றனர்.
அதன்படி இந்த ஆண்டு அக்னி நட்சத்திர கழு திருவிழா கடந்த 8-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி தினமும் காலை, மாலை வேளையில் பக்தர்கள் பழனி மலையை சுற்றிலும் கிரிவலம் வந்து வழிபட்டனர்.
இந்நிலையில் கழுதிருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெறுகிறது. இதை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் பழனி மலையை சுற்றிலும் கிரிவலம் வந்தனர்.
அப்போது பெண்கள் கடம்ப மலர்களை தலையில் சூடிக் கொண்டும், கையில் ஏந்தியும் சென்றனர். இதற்காக கிரிவீதியில் ஆங்காங்கே இலையுடன் கூடிய கடம்ப மலர்கள் ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது.
பக்தர்கள் கிரிவலம் வந்தபோது அழகுநாச்சி அம்மன் கோவில், வனதுர்கை அம்மன், மகிஷாசூரமர்த்தினி அம்மன், வீரதுர்கை அம்மன் கோவில்களுக்கும் சென்று வழிபட்டனர். இன்று திருவிழா நிறைவு பெறுவதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மலேசியாவில் உள்ளது புகழ்பெற்ற பத்துமலை முருகன் கோவில்.
- பிரசாத பொருட்கள், பட்டு வஸ்திரங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
தமிழகம் மற்றும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் இடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில், அங்குள்ள கோவில்களுக்கு தமிழக கோவில்களில் இருந்து 'வஸ்திர மரியாதை' செய்யப்படும் என்று தமிழக சட்டசபை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி மலேசியாவில் உள்ள புகழ்பெற்ற பத்துமலை முருகன் கோவிலுக்கு பழனி முருகன் கோவிலில் இருந்து பிரசாதம், பட்டு வஸ்திரம், பஞ்சாமிர்தம் மற்றும் பூஜை பொருட்கள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், ராஜசேகரன், இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் பஞ்சாமிர்தம், ராக்கால சந்தனம், கவுபீன தீர்த்தம், முருகன், வள்ளி-தெய்வானைக்கு பட்டு வேட்டி, துண்டு, சேலை, மலை வாழைப்பழம் மற்றும் பழங்கள் ஆகியவை தாம்பூல தட்டில் வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கோவில் சன்னதியில் மேற்கண்ட பிரசாத பொருட்கள், பட்டு வஸ்திரங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் கோவில் யானை கஸ்தூரி முன்செல்ல பிரசாத பொருட்கள் கோவிலை சுற்றி வலம் வந்தது.
அதன் பின்னர் பட்டு வஸ்திரம், பஞ்சாமிர்தம் மற்றும் பூஜை பொருட்களை பழனி முருகன் கோவில் சார்பில் நேற்று இரவு திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து விமானம் மூலம் மலேசியாவுக்கு பூஜை பொருட்களை அவர்கள் கொண்டு சென்றனர்.
- சிறப்பு மலர் அலங்காரம், தீபாராதனை காட்டப்பட்டது.
- பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலின் மூலவர் சிலையை 18 சித்தர்களில் ஒருவரான போகர் பெருமான் நவபாஷாணத்தால் உருவாக்கினார் என்பது ஆன்மிக வரலாறு.
இதை பிரதிபலிக்கும் வகையில் பழனி முருகன் கோவில் உட்பிரகாரத்தில் போகருக்காக தனி சன்னதி உள்ளது. இங்கு புலிப்பாணி ஆசிரம நிர்வாகம் சார்பில் பூஜை செய்யப்பட்டு வருகிறது.
பழனி முருகப்பெருமானை தரிசனம் செய்த பின்பு பக்தர்கள் போகர் பெருமானை தரிசிப்பது வழக்கம். போகர் சன்னதியில் பிரசித்தி பெற்ற பச்சை மரகத லிங்கம் உள்ளது.
ஆண்டுதோறும் வைகாசி மாத பரணி நட்சத்திர நாளன்று போகர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மரகத லிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்று வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு போகர் ஜெயந்தியையொட்டி நேற்று பழனி கோவில் போகர் சன்னதியில் உச்சிக்கால பூஜையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக சன்னதி மண்டபம் முன்பு மரகத லிங்கம் வைக்கப்பட்டு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் என 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரம், தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 14 பக்தர்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல் ஆயக்குடி அருகே பொன்னிமலை அடிவாரத்தில் உள்ள போகர் சித்தர் கோவிலில், போகர் ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெற்றது. முன்னதாக போகர் சித்தருக்கு பால், பழம், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்பட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பல்வேறு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. விழாவையொட்டி ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கோவில் அறங்காவலர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு குழு தலைவர் அறிவழகன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பழனிவேல், செயலாளர் கிருஷ்ணன், பொருளாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அறங்காவலர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், பொன்னிமலை பகுதியில் விதைப்பந்து மூலம் ஒரு கோடி மரக்கன்றுகள் நடவு செய்வது என முடிவு செய்யப்பட்டது.
- அழகர்மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு செல்ல கள்ளழகர் கோவில் நிர்வாகமே வாகனங்களை இயக்குகிறது.
- காரில் செல்பவர்கள் தனிக்கட்டணம் செலுத்தி மலை உச்சிக்கு பயணமாகலாம்.
முருகப்பெருமானின் ஆறாவது படைவீடாக போற்றப்படும் பழமுதிர்ச்சோலைக்கு, "சோலைமலை" என்ற பெயரும் உண்டு. இங்குள்ள முருகப்பெருமான் வெற்றிவேல் முருகன் என்று அழைக்கப்படுகிறார். பழமுதிர்ச்சோலை என்பதற்கு "பழங்கள் உதிர்க்கப் பெற்ற சோலை" என்று பொருள் எடுத்துக்கொள்ளலாம்.
எந்த முருகன் கோவில்களுக்கும் இல்லாத தனிச்சிறப்பு இந்த கோவிலுக்கு உண்டு. அதாவது, இந்த தலம் அமைந்துள்ள மலையின் அடிவாரத்தில் கள்ளழகர் கோவிலும், மலை உச்சியில் முருகப்பெருமானின் ஆறாவது படைவீடும் அமைந்துள்ளது. இது சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
கோவில் அமைவிடம் :
மதுரை மாநகரில் இருந்து வடக்கே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அழகர்மலை உச்சியில் இந்த பழமுதிர்ச்சோலை அமைந்துள்ளது. மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ளது.
மலையின் அடிவாரத்தை சென்றடைந்ததும் அழகர்கோவில் கள்ளழகர் என்ற சுந்தரராஜப் பெருமாள் கோவில் கம்பீரமாக நம்மை வரவேற்கிறது. அழகர் கோவில் நுழைவுவாயில் முன்பு நாம் இறங்கியதும், வேறு யாரும் வரவேற்கிறார்களோ இல்லையோ, குரங்குகள் தவறாமல் கூட்டமாக வந்து வரவேற்கின்றன.
ஆம்... இங்கு குரங்குகள் அதிகமாக காணப்படுகின்றன. கொஞ்சம் அசந்தால் நம் கையில் உள்ள பொருட்களை அலேக்காக லபக்கிவிடுகின்றன இவை. அதனால், கொஞ்சம் உஷாராகத்தான் செல்ல வேண்டியிருக்கிறது.
அழகர்மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு செல்ல கள்ளழகர் கோவில் நிர்வாகமே வாகனங்களை இயக்குகிறது. காரில் செல்பவர்கள் தனிக்கட்டணம் செலுத்தி மலை உச்சிக்கு பயணமாகலாம். சுமார் 15 நிமிடங்கள் வளைந்து நெளிந்து செல்லும் மலையில் மெதுவாக பயணித்தால் மலை உச்சியை அடையலாம். அங்கு பழமுதிர்ச்சோலை என்கிற சோலைமலை அமைந்துள்ளது.
வரலாற்று ஆதாரங்கள் :
திருமுருகாற்றுப்படையில் வரும் பழமுதிர்ச்சோலை என்பதற்கு பழம் முற்றிய சோலை என்று நச்சினார்க்கினியர் உரை எழுதியிருக்கிறார்.
கந்தபுராணத் துதிப்பாடலில், வள்ளியம்மையைத் திருமணம் செய்ய விநாயகரை யானையாக வந்து உதவும்படி முருகப்பெருமான் அழைத்த தலம் பழமுதிர்ச்சோலை என்று கூறுகிறார் கச்சியப்ப சிவாச்சாரியார். எனவே ஆறாவது படை வீடாகிய பழமுதிர்ச்சோலை, வள்ளி மலையைக் குறிக்கும் என்று ஒருசாரார் தெரிவிக்கின்றனர்.
ஆனால் அருணகிரிநாதர், திருப்புகழில் வள்ளி மலையையும், பழமுதிர்ச்சோலையையும் தனித்தனியே பாடியிருக்கிறார். மேலும் பழமுதிர்ச்சோலையில் இன்றும் காணப்படுகின்ற "நூபுர கங்கை" என்னும் சிலம்பாற்றை பழமுதிர்ச்சோலைத் திருப்புகழில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். அதனால், பழமுதிர்ச்சோலையே முருகப்பெருமானின் ஆறாவது படைவீடாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
பழமுதிர்ச்சோலை முருகப்பெருமானுக்கு உகந்த நாளாக வெள்ளிக்கிழமை கருதப்படுகிறது. அன்றையதினம் முருகப் பெருமானுக்கு தேனும் தினை மாவும் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. கோவில் மூலஸ்தானத்தில் வெற்றிவேலனாக முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.
அவ்வையை சுட்ட பழம் :
அறுபடை வீடுகள் ஒவ்வொன்றிலும் திருவிளையாடல் புரிந்த அழகன் முருகன், இந்த தலத்தில், மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த அவ்வையாரிடம் திருவிளையாடல் புரிந்ததாக சொல்கிறார்கள்.
தனது புலமையால் புகழின் உச்சிக்கு சென்ற அவ்வையாருக்கு தான் என்ற அகங்காரம் ஏற்பட்டது. அந்த அகங்காரத்தில் இருந்து அவ்வையை விடுவிக்க எண்ணிய முருகப்பெருமான், அவ்வை மதுரைக்கு காட்டு வழியாக நடந்து செல்லும் வழியில் ஆடு மேய்க்கும் சிறுவனாக தோன்றி வந்தார்.
அங்கிருந்த ஒரு நாவல் மரத்தின் கிளை ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டார். நடந்து வந்த களைப்பால் அந்த மரத்தின் அடியில் வந்து அமர்ந்தார் அவ்வை. நீண்ட தொலைவு பயணம் அவருக்கு களைப்பையும் தந்திருந்தது. வயிறு பசிக்கவும் செய்தது.
அப்போது, தற்செயலாக அந்த மரக்கிளையில் ஆடுமேய்க்கும் சிறுவன் ஒருவன் அமர்ந்திருப்பதைக் கண்டார். அந்த மரத்தில் நிறைய நாவல் பழங்கள் இருப்பதையும் பார்த்தார்.
உடனே அந்த சிறுவனிடம், "குழந்தாய்... எனக்கு பசிக்கிறது. சிறிது நாவல் பழங்களை பறித்து தர முடியுமா? " என்று கேட்டார். அதற்கு, சிறுவனாக இருந்த முருகப்பெருமான், "சுட்டப் பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? " என்று கேட்டார்.
சிறுவனின் கேள்வி அவ்வைக்கு புரியவில்லை. பழத்தில் கூட சுட்டப்பழம், சுடாத பழம் என்று இருக்கிறதா? என்று எண்ணிக் கொண்டவர், விளையாட்டாக "சுட்டப்பழத்தையே கொடுப்பா... " என்று கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து, நாவல் மரத்தின் கிளை ஒன்றை சிறுவனாகிய முருகப்பெருமான் உலுப்ப, நாவல் பழங்கள் அதில் இருந்து கீழே உதிர்ந்து விழுந்தன. அந்த பழங்களை பொறுக்கிய அவ்வை, அந்த பழத்தில் மணல் ஒட்டி இருந்ததால், அவற்றை நீக்கும் பொருட்டு வாயால் ஊதினார்.
இதைப் பார்த்துக்கொண்டிருந்த சிறுவனாகிய முருகப்பெருமான், "என்ன பாட்டி... பழம் சுடுகிறதா? " என்று கேட்டார்.
சிறுவனின் அந்த ஒரு கேள்வியிலேயே அவ்வையின் அகங்காரம் பறந்துபோனது. தன்னையே சிந்திக்க வைத்த அந்த சிறுவன் நிச்சயம் மானுடனாக இருக்க முடியாது என்று கணித்த அவ்வை, "குழந்தாய்... நீ யாரப்பா? " என்று கேட்டார்.
மரக்கிளையில் இருந்து கீழே குதித்த சிறுவன் முருகப்பெருமான், தனது சுயஉருவத்தை காண்பித்து அவ்வைக்கு அருளினார்.
இந்த திருவிளையாடல் நடந்த நாவல் மரத்தின் கிளை மரம் இன்றும் சோலைமலை உச்சியில் காணப்படுகிறது. சோலைமலை முருகன் கோவிலுக்கு சற்று முன்னதாக இந்த மரத்தை இன்றும் நாம் பார்க்கலாம்.
அதிசய நூபுர கங்கை :
பழமுதிர்ச்சோலைக்கு சற்று உயரத்தில் நூபுர கங்கை என்ற புனித தீர்த்தம் அமைந்துள்ளது. இதற்கு சிலம்பாறு என்ற பெயரும் உண்டு. இந்த தீர்த்தம் எங்கு உற்பத்தியாகிறது என்பதே புரியாத புதிராக இருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தீர்த்த தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். முருகப்பெருமானின் திருப்பாதத்தில் இருந்து இது உருவாகியது என்ற கர்ண பரம்பரைக் கதையும் வழக்கில் சொல்லப்பட்டு வருகிறது.
மலை உச்சியில் ஓரிடத்தில் இந்த தீர்த்த தண்ணீர் ஓரிடத்தில் விழும் வகையில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த இடத்தில் ராக்காயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மனை வழிபடச் செல்பவர்கள், நூபுர கங்கை விழும் இடத்தில் புனித நீராடிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த தீர்த்த தண்ணீர் இரும்புச்சத்து, தாமிரச்சத்து காரணமாக ஆரோக்கியம் மிகுந்த சுவை கொண்டதாக காணப்படுவதோடு, அதில் அபூர்வ மூலிகைகள் பல கலந்து இருப்பதால் நோய் தீர்க்கும் அருமருந்தாகவும் இருக்கிறது. இந்த தீர்த்தத்தில் நீராடினால் எப்பேற்பட்ட நோயும் பறந்தோடிவிடும் என்பதால், இங்கு தினமும் அதிக அளவில் பக்தர்கள் வந்து நீராடிச் செல்கிறார்கள்.
இந்த தீர்த்த தண்ணீரில்தான் புகழ்பெற்ற அழகர்கோவில் பிரசாதமான சம்பா தோவை தயார் செய்யப்படுகிறது.
மேலும், இந்த அழகர்மலையில் பல்வேறு மூலிகைத் தாவரங்கள், மரங்கள் காணப்படுகின்றன. பழமுதிர்ச்சோலை முருகனை தரிசிக்கச் சென்றால், இந்த மூலிகைகள் மற்றும் மூலிகை சம்பந்தப்பட்ட பொருட்களையும் கையோடு வாங்கி வரலாம்.
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, அந்த நோய் சட்டென்று கட்டுப்பட விசேஷ மூலிகை மரம் ஒன்றும் இங்கு காணப்படுகிறது. அந்த மரத்தின் விதையில் ஒன்றை சாப்பிட்டாலே சர்க்கரை நோய் கட்டுப்பட்டு விடும் என்கிறார்கள்.
திருமண பரிகார தலம் :
முருகப்பெருமானுக்கு ஆரம்ப காலத்தில் இங்கு ஆலயம் கிடையாது என்றும், இடைப்பட்ட காலத்திலேயே பக்தர்களால் மலைக்கு இடையே கோவில் எழுப்பப்பட்டு, வழிபாடு நிகழ்த்தப்பட்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது.
திருமணம் ஆகாதவர்கள், இந்த வெற்றிவேல் முருகனை வழிபட்டால் சட்டென்று திருமணம் முடிவாகி, வெற்றிக்கரமான வாழ்க்கை அமையும் என்று கூறுகிறார்கள்.
விழாக்கள் விவரம் :
கந்த சஷ்டி விழா முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. மேலும் முருகனுக்குரிய தைப்பூசம், வைகாசி விசாகம், கிருத்திகை ஆகிய நாட்களிலும் சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெறுகின்றன.
- திருத்தணியில் முருகப்பெருமான் மலைமீது எழுந்தருளி அருள் புரிகிறார்.
- ஒரு தனிமலையின் சிகரத்து உச்சியில், கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் ஐந்தாவது படை வீடாகத் திகழ்வது திருத்தணி என்று அழைக்கப்படும் திருத்தணிகை. இங்கு முருகப்பெருமான் பாலசுப்பிரமணிய சுவாமியாக, தனது இச்சா சக்தியான வள்ளியுடன் அருள்பாலிக்கிறார்.
அமைவிடம் :
திருவள்ளூர் மாவட்டத்தில், அரக்கோணத்தில் இருந்து வடக்கே 13 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருத்தணி. "தொண்டை நாடு" என்று அழைக்கப்படும் பகுதியில் திருத்தணி அமைந்திருப்பதாக தமிழ் நூல்கள் கூறுகின்றன.
தொண்டை நாட்டின் தலைநகராகிய காஞ்சிபுரம் தெற்கிலும்; விரிஞ்சிபுரம், வள்ளிமலை, சோளிங்கபுரம் ஆகியவை மேற்கிலும்; திருவாலங்காடு கிழக்கிலும்; ஸ்ரீகாளஹஸ்தி, திருப்பதி ஆகியவை வடக்கிலும் சூழ்ந்திருக்க, அவற்றிற்கு மத்தியில் நடுநாயகமாக திருத்தணி அமைந்துள்ளது.
தேவர்களை துன்புறுத்திய சூரபத்மனை சம்ஹாரம் செய்ய நடந்த பெரும் போரும், வள்ளியை மணந்துகொள்ள வேடர்களுடன் விளையாட்டாக நிகழ்த்திய சிறுபோரும் முடிந்து, தணிந்து அமர்ந்த தலம் இது என்பதால் தணிகை என பெயர் பெற்றதாக கூறுகிறார்கள்.
தணிகை என்னும் சொல்லுக்கு பொறுத்தல் என்பதும் ஒரு பொருள் என்பதால், "அடியார்களின் பிழைகளையும் பாவங்களையும் பொறுத்து அருள் புரியும் தலம், திருத்தணிகை" என்று இத்தலத்திற்கு பொருள் கொள்வதும் சரியான ஒன்றாகவே கருதலாம்.
மலையின் சிறப்புகள் :
திருத்தணியில் முருகப்பெருமான் மலைமீது எழுந்தருளி அருள் புரிகிறார். ஒரு தனிமலையின் சிகரத்து உச்சியில், இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மலையின் இருபுறங்களிலும், மலைத் தொடர்ச்சிகள் பரவிப் படர்ந்துள்ளன. வடக்கே உள்ள மலை சிறிது வெண்ணிறமாக இருப்பதால் "பச்சரிசி மலை" என்றும், தெற்கே உள்ள மலை கருநிறமாக காணப்படுவதால் "பிண்ணாக்கு மலை" என்றும் அழைக்கப்படுகின்றன.
மொத்தத்தில், இந்த திருத்தணி மலை அழகு பொங்கி வழியும் மலையாக காட்சித் தருகின்றது. அதனால்தான் என்னவோ, திருப்புகழ் தந்த அருணகிரிநாதர் "அழகுத் திருத்தணிமலை" என்று இந்த மலையை புகழ்கிறார்.
"குமார தீர்த்தம்" என்று அழைக்கப்படும் பெரிய குளம், மலையடிவாரத்தில் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் இதில் நீராடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த தீர்த்தத்தை சுற்றிப் பல மடங்கள் உள்ளன. அதனால் இப்பகுதி "மடம் கிராமம்" என்று அழைக்கப்படுகிறது.
தலச்சிறப்புகள் :
இந்த தலம் மிகவும் தொன்மை வாய்ந்தது. அருணகிரிநாதர், 63 திருப்புகழ்ப் பாடல்களால் இத்தலத்தினைப் பெரிதும் போற்றி பாடியுள்ளார். அதனால் 600 ஆண்டுகளுக்கு முன்பே, இந்த கோவில் சிறப்புபெற்று விளங்கியது தெரிய வருகிறது.
இதுதவிர, சுமார் 900 ஆண்டுகளுக்கும் முன்பு வாழ்ந்த கச்சியப்ப சிவாச்சாரியார், தமது கந்தபுராணத்தில் "மலர்களில் தாமரை மலர் போலவும், நதிகளில் கங்கை நதி போலவும், தலங்களில் காஞ்சிபுரம் போலவும், மலைகளில் எல்லாம் சிறந்தோங்கித் திகழ்வது திருத்தணிகையே" என்று கூறுகிறார்.
சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த திருநாவுக்கரசர், திருப்புறம்பயம் தலத்துத் திருத்தாண்டகத்தில் "கல் மலிந்தோங்கும் கழுநீர்க்குன்றம்" என்று திருத்தணிகையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
தேவேந்திரன் இங்கு முருகப் பெருமானை நீலோற்பலம் என்னும் கழுநீர் மலர் கொண்டு பூஜித்தான் என்கிறது இக்கோவில் தலவரலாறு.
திருமுருகாற்றுப்படை தந்த-நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே... என்று சிவபெருமானிடமே வாதிட்ட நக்கீரர், இந்த தலத்தை குன்றுதோறாடல் என்று குறிப்பிடுகிறார். குன்றுதோறாடல் என்பது, முருகன் எழுந்தருளி விளங்கும் மலைத் தலங்கள் எல்லாவற்றையுமே குறிக்கும் என்றாலும், திருத்தணிகை தலத்தையே தனிச்சிறப்பாகக் குறிக்கும் என்பது அறிஞர்களின் கருத்து.
வள்ளலாரும், முருகப்பெருமானும் :
வடலூர் ராமலிங்க அடிகளார், திருத்தணி முருகப்பெருமானை நினைந்து உருகி அவரையே ஞான குருவாகக் கொண்டவர். தனது இளம் வயதிலேயே கண்ணாடியில் திருத்தணி முருகப்பெருமானின் காட்சியை கண்டு பரவசம் ஆகி இருக்கிறார். அதனால், பிரார்த்தனை மாலையில் திருத்தணி முருகனை போற்றிப் புகழ்ந்து பாடியுள்ளார்.
சூரசம்ஹாரம் நடக்காத திருத்தணி :
சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் (வதம்) செய்த இடம் திருச்செந்தூராகும். கந்தசஷ்டி அன்று அந்த நிகழ்ச்சி அனைத்து முருகன் கோவில்களிலுமே நடத்தப்படுகிறது. ஆனால், திருத்தணியில் மட்டும் கொண்டாடப்படுவதில்லை. அங்கு, போருக்குப் பின் அமைதி நிலவுவதாக கருதப்படுவதால் சூரசம்ஹாரத்தை நடத்துவதில்லை.
திருவிழாக்கள் விவரம் :
ஆடி கிருத்திகை, தை கிருத்திகை, மாசி கிருத்திகை ஆகிய சிறப்பு நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள், பூக்காவடி, பால்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
வள்ளிமலை சுவாமிகள், இத்தலத்தில் திருப்புகழ் பாராயணம் செய்து கொண்டே மலையேறும் திருப்புகழ் திருப்படித் திருவிழாவை தொடங்கி வைத்தார். இப்போதும் ஆண்டுதோறும் அவ்விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
- பழனி முருகன்கோவிலில் போகர் சன்னதி உள்ளது.
- 18-ந்தேதி போகர் ஜெயந்தி விழா நடக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி புலிப்பாணி ஆசிரமத்தை சேர்ந்த சிவானந்தா புலிப்பாணி சுவாமிகள், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
பழனி முருகன்கோவிலில் போகர் சன்னதி உள்ளது. இது, புலிப்பாணி ஆசிரமத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் போகர் ஜெயந்தி விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வருகிற 18-ந் தேதி அந்த விழா நடக்கிறது. ஆனால் இந்த ஆண்டு போகர் ஜெயந்தியை நடத்த அறநிலையத்துறை அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர்.
இது சட்டத்துக்கும், ஆன்மிகத்துக்கும் புறம்பானது. பழனி கோவிலில் போகர் சன்னதியில் தொன்றுதொட்டு புலிப்பாணி பாத்திர சாமிகள் முறையாக பூஜை செய்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். கடந்த ஆண்டுகளில் போகர் ஜெயந்தி விழா அபிஷேக பூஜைகள் நடத்தியதற்கான ஆதாரமாக வீடியோ பதிவுகள் உள்ளன. எனவே வருகிற 18-ந்தேதி அன்றும் வழக்கம் போல போகர் ஜெயந்தி பூஜையை நடத்த அனுமதிக்கும்படி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஸ்ரீமதி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, போகர் சன்னதியில் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வரும் பூஜைக்கு தடை விதிப்பது என்பது சட்டவிரோதம். ஏராளமான பக்தர்களின் எதிர்பார்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக இது அமைந்துள்ளது என தெரிவித்தார். விசாரணை முடிவில், வருகிற 18-ந்தேதி புலிப்பாணி ஆசிரமம் சார்பில் காலை 11 மணி முதல் பகல் 2 மணி வரை போகர் ஜெயந்தி விழாவை முறைப்படி நடத்த அனுமதிக்கப்படுகிறது. போகர் ஜெயந்தியின் போது, மரகதலிங்கத்திற்கும், புவனேஸ்வரி அம்மனுக்கும் வழக்கம் போல் அபிஷேகம் நடத்தவும் அனுமதி வழங்கப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.