செய்திகள்
கோப்பு படம்

குளச்சல் அருகே வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீள நல்லபாம்பு

Published On 2020-01-07 12:24 GMT   |   Update On 2020-01-07 12:24 GMT
குளச்சல் அருகே வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீள நல்லபாம்பை வன ஊழியர்கள் அடர்ந்த காட்டுப்பகுதிக்கு கொண்டுச் சென்று விட்டனர்.
குளச்சல்:

குளச்சலை அடுத்த களிமார் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது29).

திரிபுராவில் ரவிச்சந்திரன் எல்லை பாதுகாப்பு படை வீரராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பிரகலா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

ரவிச்சந்திரன் வீட்டின் பின்புறம் தனியாக சமையல் அறை கட்டியுள்ளார். இதன் அருகே விறகு மற்றும் பொருட்கள் போட்டு வைத்திருந்தார்.

ரவிச்சந்திரன் மனைவி பிரகலா நேற்று சமையல் செய்ய அறைக்கு சென்றார். விறகு எடுத்த போது அதற்குள் இருந்து பாம்பு ஒன்று சீறி எழுந்தது. இதை கண்டு பிரகலா அலறியடித்து ஓடினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். அவர்கள் வீட்டிற்குள் பாம்பு இருப்பது பற்றி குளச்சல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். நிலைய அதிகாரி தேவராஜ் தலைமையில் வீரர்கள் அங்கு விரைந்துச் சென்றனர்.

ரவிச்சந்திரன் வீட்டு சமையல் அறை பகுதியில் இருந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர். அந்த பாம்பு 6 அடி நீள நல்லபாம்பு ஆகும். இது பற்றி தீயணைப்பு வீரர்கள் வேளிமலை வன ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் பிடிபட்ட பாம்பை வன ஊழியர்களிடம் தீயணைப்பு வீரர்கள் ஒப்படைத்தனர். வன ஊழியர்கள் அந்த பாம்பை அடர்ந்த காட்டுப்பகுதிக்கு கொண்டுச் சென்று விட்டனர்.
Tags:    

Similar News