செய்திகள்
கைது

ரூ.10 ஆயிரம் கடனை கொடுக்க மறுத்த தொழிலாளி கொலையில் வாலிபர் கைது

Published On 2020-01-03 10:25 GMT   |   Update On 2020-01-03 10:25 GMT
ரூ.10 ஆயிரம் கடனை கொடுக்க மறுத்த தொழிலாளி கொலையில் வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர்:

திருப்பூர் ஊத்துக்குளி ரோடு கோல்டன் நகர் அருகே உள்ள பவானி நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 37). பனியன் நிறுவன தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பாத்திமா கனி என்பவரிடம் தனது குடும்ப தேவைக்காக ரூ.10 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார்.

இந்நிலையில் சுரேஷ் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இது குறித்து பாத்திமா கனி தனது அக்காள் கணவரான அப்துல் காதரிடம் (45) கூறினார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அப்துல் காதரும், அவரது நண்பருமான கோல்டன்நகரை சேர்ந்த நாகராஜ் (40) என்பவரும் கோல்டன்நகர் பகுதியில் நின்று கொண்டு இருந்த சுரேசிடம் ரூ.10 ஆயிரம் கடனை கேட்டனர். அவர் கொடுக்க மறுத்ததால் தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த சுரேசை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

இது தொடர்பாக திருப்பூர் வடக்கு போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்த கொலை தொடர்பாக கோல்டன்நகரை சேர்ந்த சாகுல் அமீது (40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்மேலும் தலைமறைவாக உள்ள அப்துல்காதர், நாகராஜ் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News