திருத்துறைப்பூண்டி அருகே கோவில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து முதியவர் பலி
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பழையங்குடி கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அகத்தீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 15 அடி உயரமுடைய சுற்றுச்சுவர் உள்ளது.
இந்த சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள குடியிருப்பில் மாரியப்பன் (வயது 65) என்பவர் வசித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று மாலை மாரியப்பன் தன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிர் பாராத விதமாக கோவில் சுற்றுச்சுவர் இடிந்து மாரியப்பனின் மீது விழுந்தது. இதில் இடிபாட்டில் சிக்கிய மாரியப்பன் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் நடந்த இடத்தின் அருகிலேயே பழையங்குடி ஊராட்சித் தேர்தலுக்கான வாக்குச் சாவடிகள் உள்ளதால், அப்பகுதியில் பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு சென்று மாரியப்பனின் சடலத்தை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்தை திருத்துறைப்பூண்டி தாசில்தார் ராஜன்பாபு, டி.எஸ்.பி. பழனிசாமி, இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் பார்வையிட்டார்.
அப்போது எஞ்சியிருந்த சுற்றுச்சுவரை முழுமையாக இடிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் அங்கிருந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.