செய்திகள்
வாட்ஸ்அப் தற்கொலை

குடும்ப தகராறில் தற்கொலை - வாட்ஸ்அப்பில் பரவும் உருக்கமான வீடியோ

Published On 2019-12-23 17:46 GMT   |   Update On 2019-12-23 17:46 GMT
தர்மபுரி அருகே குடும்ப தகராறு காரணமாக வாட்ஸ்-அப்பில் உருக்கமாக பேசி கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தர்மபுரி:

தர்மபுரி அருகே கே.நாகரசம்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் துளசிமணி (வயது 33). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி பிரியா. இதனிடையே துளசிமணி, அவரது மனைவி மற்றும் நண்பர்களுடன் இணைந்து வாட்ஸ்-அப் குரூப் தொடங்கினார். எப்போதுமே செல்போனை பார்த்து கொண்டிருக்கும் துளசிமணி தனக்கு வரும் செய்திகளை மற்றவர்களுக்கு பகிர்ந்து வந்தார்.

குடிப்பழக்கத்திற்கு ஆளானதால் துளசிமணிக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இந்த தகராறை தொடர்ந்து துளசிமணி தற்கொலை செய்து கொள்ளும் முடிவிற்கு வந்தார்.

இதனிடையே தனக்குத்தானே மாலை போட்டு மலர்களை தூவுவது போன்ற படங்களுடன் வாட்ஸ்-அப் குரூப்பில் ஒரு படத்தை அனுப்பினார்.

இதனை பார்த்த மனைவி மற்றும் நண்பர்கள், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரிடம் போனில் தொடர்பு கொண்டு கேட்ட போது இந்த உலகத்தில் வாழ விருப்பமில்லை என்றும், என்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் கூறி உள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள அறைக்கு சென்ற துளசிமணி கதவை உள்பக்கமாக பூட்டி விட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தர்மபுரி டவுன் போலீசார் விரைந்து சென்று துளசிமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

துளசிமணியின் செல்போனை போலீசார் சோதனை செய்த போது இறந்தவர்களுக்கு செய்யும் சடங்கு போன்ற காட்சிகளை தனக்குதானே செய்து அந்த காட்சிகளை வாட்ஸ்-அப்பில் அனுப்பியதும் தெரிய வந்தது. இந்த சம்பவம் தர்மபுரி பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
Tags:    

Similar News