திருவாரூர் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
திருவாரூர்:
திருவாரூர் அருகே உள்ளது அத்திக்கடை கிராமம். இங்கு ஒரு அரசுடையாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். தனியாக செயல்படுகிறது. இந்த ஏ.டி.எம்.மில் தினமும் ஏராளமானோர் தங்களது வங்கி கணக்கில் இருந்து ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுப்பது வழக்கம். இந்த நிலையில் இன்று மதியம் ஏ.டி.எம்.மில் சிறிது நேரம் யாரும் பணம் எடுக்க வரவில்லை.
இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் அங்கு வந்து ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைந்தனர். அதில் ஒருவன் வெளியே நின்று யாரும் வருகிறார்களா? என கண்காணித்து கொண்டிருந்தான். இதையடுத்து பணத்தை கொள்ளை அடிக்கும் எண்ணத்தோடு மர்மநபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்றனர். அப்போது ஏ.டி.எம். எந்திரம் லாக் ஆனது. அதில் இருந்து சத்தம் கேட்க தொடங்கியது. இதையடுத்து இங்கிருந்தால் மாட்டி கொள்வோம் என்று கருதிய மர்ம நபர்கள் வேகமாக ஏ.டி.எம் மையத்தில் இருந்து வெளியேறி தப்பி ஓடிவிட்டனர்.
சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு திரண்டனர். இது குறித்து கொரடாச்சேரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஏ.டி.எம். எந்திரத்தை பார்வையிட்டனர். அது லாக் ஆகி சத்தம் கேட்டதால் அதிர்ஷ்டவசமாக பணம் தப்பியது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர். சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்த வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்கள் வந்து சென்றதற்கான காட்சிகளை சோதனை செய்து வருகின்றனர். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.