தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்திய போலீஸ் கேன்டீனுக்கு ரூ.3 ஆயிரம் அபராதம்
கோவை:
தமிழகத்தில் கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் சுற்றுசூழலை பாதுகாக்க 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ,மாநகராட்சி அதிகாரிகள் கடைகள், ஓட்டல் உள்பட அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் கேன்டீனில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
இதனையடுத்து மத்திய மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் போலீஸ் கேன்டீனில் சோதனை நடத்தினர். இதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் பயன்படுத்துவது தெரிய வந்தது.
இதனையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் கேன்டீன் நிர்வாகிகளுக்கு ரூ. 3 ஆயிரம் அபராதம் விதித்தனர். இனியும் தொடர்ந்து பயன்படுத்தினால் தொழில் உரிமம் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து சென்றனர்.