செய்திகள்
மாணவியை கடத்தி திருமணம்: வாலிபர் உள்பட 2 பேர் கைது
தஞ்சையில் மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் உள்பட 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா, அம்மாபேட்டை உக்கடை ரோடு, பகுதியில் வசித்து வருபவர் மோகன் ( வயது 50), விவசாயி. இவரது மனைவி பாண்டிசெல்வி (வயது 40). இவரது மகள் தேவி (16).(பெயர் மாற்றப் பட்டுள்ளது). இவர் அம்மாபேட்டையில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இவரை திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுக்கா குடிதாங்கிசேரி, கோரையாறு நடுத்தெருவில் வசித்து வரும் சிகாமணி மகன் விஜய் (22) கண்டெய்னர் லாரி டிரைவர் என்பவர் காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 17-ந் தேதி மாலை தேவி பள்ளிவிட்டு வரும்போது விஜய் வழிமறித்து, ``உன்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஊருக்கு அழைத்துசென்றுவிட்டார். பின்னர் அதே ஊரை சேர்ந்த அவரது நண்பர் கோரையாறு கீழ்பாதி மெயின் ரோட்டை சேர்ந்த அழகேசன் (22) என்பவர் உதவியுடன் அங்குள்ள பிள்ளையார்கோவிலில் தேவியை விஜய் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் தனது மகளை காணவில்லை என்று தேவிவின் தாயார், பாபநாசம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இது குறித்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து விஜய் மற்றும் அவரது நண்பர் அழகேசன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.