செய்திகள்
திருட்டு

கருங்கல் அருகே வீடு புகுந்து பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு

Published On 2019-12-19 10:15 GMT   |   Update On 2019-12-19 10:15 GMT
கருங்கல் அருகே வீடு புகுந்து பெண்ணிடம் 5 பவுன் நகையை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடியவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:

கருங்கல் அருகே மாதாபுரம் கன்னித்தட்டு பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ். இவரது மனைவி ராஜதங்கம் (வயது 48).

இவர் நேற்று மாலை வீட்டில் இருந்தார். அப்போது மாதாபுரம் பருத்தி விளையைச் சேர்ந்த டைனஸ் (59) என்பவர் பிரான்சிஸ் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் இருந்த ராஜ தங்கத்தின் கையைப்பிடித்து இழுத்தார்.

ராஜதங்கம் கூச்சலிடவே அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்துவிட்டு தப்பி ஓடினார். ராஜதங்கத்தின் சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் டைனஸ் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

இதுகுறித்து ராஜதங்கம் கருங்கல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். டைனஸ் மீது இந்திய தண்டனைச்சட்டம் 451, 342, 294(பி), 354, 392 ஐ.பி.சி. ஆகிய 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து போலீசார் டைனசை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News