செய்திகள்
கோப்பு படம்

சொத்து தகராறில் சித்தப்பாவை கட்டையால் தாக்கி கொலை செய்த வாலிபர்

Published On 2019-12-16 12:24 GMT   |   Update On 2019-12-16 12:24 GMT
தஞ்சை அருகே சொத்து தகராறில் சித்தப்பாவை கொலை செய்த வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர்:

தஞ்சையை அடுத்த கூடலூர் பெரியதெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 63). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் இவரது அண்ணன் பெருமாள்(71). இவர்கள் 2 பேருக்கும் இடையே சொத்து பிரச்சினை, இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக அடிக்கடி இவர்களுக்குள் தகராறும் ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று இரவு கோவிந்தராஜ் வீட்டுக்கு பெருமாள், தனது மனைவி கனகாம்பாள் மகன் நீதிபதி (30) ஆகியோருடன் சென்றார். அங்கு இடப்பிரச்சினை தொடர்பாக அவர்களுக்குள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டிருந்தனர். இதில் ஆத்திரம் அடைந்த நீதிபதி உருட்டு கட்டையால் சரமாரியாக கோவிந்தராஜின் தலையில் தாக்கினாராம். இதில் ரத்த வெள்ளத்தில் கோவிந்தராஜ் சரிந்து விழுந்தார். இதை பார்த்ததும் உடனடியாக அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். பலத்த காயம் அடைந்து கிடந்த கோவிந்தராஜை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கோவிந்தராஜ் இறந்தார். இது குறித்து தஞ்சை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரித்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நீதிபதி, பெருமாள், கனகாம்பாளை தேடி வருகின்றனர். தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News