செய்திகள்
பலி

பல்லடம் அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலி

Published On 2019-12-14 12:39 GMT   |   Update On 2019-12-14 12:39 GMT
பல்லடம் அருகே மர்ம காய்ச்சலுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

பல்லடம்:

பல்லடம் மாதப்பூர் தொட்டம்பட்டியை சேர்ந்தவர் உதயகுமார். இவரது மனைவி பத்மாவதி. இவர்களது மகன்கள் விஷ்ணு (வயது 7), ஹரீஸ் (5). இதில் விஷ்ணு அங்குள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 4-ந்தேதி விஷ்ணுவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து பொங்கலூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர். ஆனால் அங்கு விஷ்ணுவுக்கு காய்ச்சல் குணமாகவில்லை. இதனையடுத்து கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அங்கு சாதாரண காய்ச்சல் என்று அறிக்கை வந்ததையடுத்து மீண்டும் வீடு திரும்பினர்.

இருந்தும் கடந்த 3 நாட்களாக விஷ்ணுவுக்கு விட்டுவிட்டு காய்ச்சல் வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் விளையாடியபோது விஷ்ணு மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் மீட்டுபொங்கலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு விஷ்ணுவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக பல்லடத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் உயிரிழந்ததை அடுத்து அந்த பகுதியில் சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News