செய்திகள்
நாராயணசாமி

தெலுங்கானா என்கவுண்டர் இறைவன் கொடுத்த தண்டனை- நாராயணசாமி கருத்து

Published On 2019-12-06 10:13 GMT   |   Update On 2019-12-06 12:58 GMT
தெலுங்கானாவில் டாக்டர் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை போலீசார் என்கவுண்டர் செய்துள்ளனர். இது இறைவன் கொடுத்த தண்டனை என்று நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி:

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வேலை வாய்ப்பு இல்லாமல் தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டு கிடக்கிறது. இதற்கு முக்கிய காரணம் மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைதான். 7 சதவீதம் இருந்த நாட்டின் வளர்ச்சி 4.5 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால் நடுத்தர, கீழ்த்தட்டு மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

தினமும் மக்கள் உபயோகப்படுத்தும் வெங்காய விலை உச்சத்தை எட்டியுள்ளது. டெல்லியில் ரூ.300-க்கு வெங்காயம் விற்கப்படுகிறது. வரலாறு காணாத விலைவாசி உயர்வுக்கு நிதிமந்திரி நிர்மலா சீத்தராமன் பதிலளிக்கும்போது, பூண்டு, வெங்காயத்தை நான் குறைத்து சாப்பிடுகிறேன் என கூறியுள்ளார்.


விலைவாசியை குறைக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. சாதாரண மக்களால் வெங்காயத்தை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தெலுங்கானாவில் டாக்டர் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் தப்பியோட முயற்சித்தபோது போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர்.

கற்பழிப்பு, படுகொலை, பெண்களை எரித்து கொலை செய்தல் ஆகிய குற்றங்களை செய்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். இது இறைவன் கொடுத்த தண்டனை.

இதிலிருந்து குற்றவாளிகள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். புதுவையில் பெண்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளோம்.

புதுவையில் அமைதியான, நிம்மதியான சூழலில் மக்கள் வாழ வழி செய்துள்ளோம். புதுவையில் வெங்காய விலையை கட்டுப்படுத்த குடிமைப்பொருள் வழங்கல்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளோம். புதுவையிலும் உள்ளாட்சி தேர்தலை நடத்தும் பணிகள் நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News