செய்திகள்
மேலூர் அருகே கனமழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதம்
மேலூர் அருகே கனமழையால் அறுவடைக்கு தயாரான 55 ஏக்கர் பரப்பளவு நெற்பயிர்கள் தண்ணீரால் அழுகின. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மேலூர்:
மதுரை மாவட்டம், மேலூர் அருகே கொங்கம் பட்டியில் மழையை நம்பி, கண்மாய்களில் நிரம்பும் தண்ணீரை கொண்டு விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தாண்டும் பருவ மழையை எதிர்பார்த்து விவசாயிகள் ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவளித்து இன்னும் 10 நாட்களில் அறுவடைக்கு தயாரான வேளையில், கனமழை காரணமாக இந்த கிராமத்தில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் சாய்ந்து அழுகின.
காசிம், கனி, மும்தாஜ், சேக்தாவூத் உள்ளிட்ட பலரது நிலங்களில் பயிடப் பட்டிருந்த 55 ஏக்கர் பரப்பளவு நெற்பயிர்கள் தண்ணீரால் அழுகின.
இதனால் பல ஆயிரம் ரூபாய் வரை ஏக்கருக்கு செலவளித்த விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்க வழிவகை செய்ய வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.