செய்திகள்
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக அன்பு நியமனம் -தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கான ஐ.ஜி.யாக டி.எஸ்.அன்பு நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை:
கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேலை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் மேலும் ஒரு ஆண்டுக்கு சிறப்பு அதிகாரியாக நியமித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதற்கிடையே, சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஏ.டி.ஜி.பி.யிடம் ஒப்படைக்க பொன். மாணிக்கவேலுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேலின் பணிக்காலம் முடிவடைந்தது.
இந்நிலையில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக டி.எஸ்.அன்பு நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
இவர் ஏற்கனவே காவல் துறையின் நிர்வாக ஐ.ஜி.யாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.