செய்திகள்
பஸ்சில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி
ஆலங்குடி அருகே திடீரென பிரேக் போட்டதால் பஸ்சில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாப்பான்விடுதி ஆதி திராவிட காலனியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 20). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார்.
இந்தநிலையில் கோவையில் இருந்து ஊருக்கு புறப்பட்ட அவர், புதுக்கோட்டை வந்ததும் தஞ்சாவூர் செல்லும் தனியார் பஸ்சில் ஏறி ஆலங்குடி வந்தார். ஆலங்குடி அரசமரம் பஸ் நிறுத்தம் அருகே வரும் போது டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் பஸ்சிலிருந்து தூக்கி வீசப்பட்ட பாலமுருகன் சம்பவ இடத்திலேயே காயமடைந்து உயிரிழந்தார்.
விபத்து குறித்து பால முருகனின் தந்தை தென்னரசு கொடுத்த புகாரின் பேரில் டிரைவர் ராமராஜை போலீசார் கைது செய்தனர்.