செய்திகள்
தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.

உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் தி.மு.க. வெற்றி பெற வேண்டும் - வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. பேச்சு

Published On 2019-11-25 13:57 GMT   |   Update On 2019-11-25 13:57 GMT
உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கூறினார்.
திருக்கோவிலூர்:

ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருக்கோவிலூர் ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுடனான ஆலோசனை கூட்டம் திருக்கோவிலூரில் நடைபெற்றது. இதற்கு திருக்கோவிலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஏகாம்பரம் தலைமை தாங்கினார். உளுந்தூர்பேட்டை ஒன்றிய செயலாளர்கள் காட்டுச்செல்லூர் ராஜவேல், உளுந்தூர்பேட்டை வைத்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் கலந்து கொண்டு உள்ளாட்சி தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து தி.மு.க. கட்சி நிர்வாகிகள், செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

கடந்த நாடாளுமன்ற தேர்தலை போன்று வருகிற உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க. அமோக வெற்றி பெற வேண்டும். குறிப்பாக ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் அனைத்து இடங்களிலும் தி.மு.க. தான் வெற்றி பெற வேண்டும்.

அதற்கு ஏற்றவாறு தேர்தல் பணியில் ஈடுபடவேண்டும். இதில் யாரேனும் கட்சிக்கு துரோகம் செய்தால் அவர்கள் கட்சியை விட்டு நீக்கப்படுவார்கள். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி கட்சியினர் கண்ணும், கருத்துமாக செயல்பட்டு வெற்றிக்கனியை பறிக்க வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார். 

கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News